Dasa Maha Vidya

ஜெயம் அருளும் ஸ்ரீ பகளாமுகி தேவி!

First Published : 04 June 2011 10:48 AM IST





ஸ்ரீபரமேஸ்வரர் அருளிய வேதங்கள் உலகுக்கு வழங்கிய பெருங்கொடையாகும். ஸ்ரீபரமேஸ்வரர் உபாசிக்கும் ஸ்ரீ பகளாமுகி தேவிக்கு இந்தியாவில் ஒரு கோயில் மட்டும் இமாசலப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ளது. பராசக்தியினுடைய பிரத்யட்ஷ வடிவமான ஸ்ரீ பகளாமுகி தேவியை கைலாசநாதனாகிய ஸ்ரீ பரமேஸ்வரர் இடைவிடாமல் உபாசிக்கின்றார்.


தேவி பராசக்தி, பஞ்சபூதங்களான அக்னி, வாயு, ஜலம், ஆகாயம், பூமியை படைத்தாள். மேலும் கிரகங்கள், எண்ணிலடங்காத ஜீவராசிகள், செடி, கொடிகள், மரங்கள், சொர்க்கம், நரகங்களை உள்ளடக்கிய பதினான்கு லோகங்கள் தேவர்கள், அசுரர்கள் என்றும் படைத்தாள்.


சத்வ, ராஜஸ, தாமஸ என்ற மூன்று குணங்களும் ஒன்று சேர்ந்த ஸ்ரீ பராசக்தியாய தேவி உலகம் என்றென்றும் நிலைத்திருக்கும் பொருட்டு சிருஷ்டி-ஸ்திதி, சம்ஹாரம் (படைத்தல், காத்தல், அழித்தல்) என்ற சுழலும் சக்கரத்தை படைத்து அந்த சுழற்சியில், தான் படைத்த அனைத்தையும் இணைத்தாள்.


இந்த சுழற்சி தொடர்ந்து நடைபெறுவதற்காக மும்மூர்த்திகளான ப்ரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் முறையே சத்வ, ராஜஸ, தாமஸ குணங்களுடன் பராசக்தியாகிய தேவி படைத்தாள். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் தொடர்ந்து முறையாக நடைபெற ப்ரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கு துணையாக சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோரும் படைக்கப்பட்டனர்.











மாபெரும் தெய்வங்களான மும்மூர்த்திகளையும் அனைத்து உலகங்களையும் படைத்து பாதுகாக்கும் ஆதிபராசக்தி தருணங்களுக்கு ஏற்றவாறு வேறுபட்ட காலகட்டங்களிலும் வேறுபட்ட நிலைகளில் பத்து விதமான வடிவங்களில் இந்திரன் முதலான தேவர்களுக்கும் மும்மூர்த்திகளுக்கும் தரிசனம் தந்திருக்கின்றாள். இதன் வெளிப்பாடே தச மஹா வித்யா என்று அறியப்படுகிறது.


மாதங்கி, புவனேஸ்வரி, பகளாமுகி, திரிபுரசுந்தரி, தாரா, மாகாளி, மகாலட்சுமி, சின்னமஸ்தா, தூமாவதி, பைரவி என்ற 10 விதமான சொரூபங்களில் தேவி பராசக்தி தரிசனம் தந்திருக்கிறாள்.


தமோ குண சொரூபனான மஹாதேவன் ஆராதிக்கும் ஸ்ரீ பகளாமுகி தேவிதான் தசமஹாவித்யாவிலேயே மிக சக்தி வாய்ந்த தேவி சொரூபமாகும். தனக்குள் சரிசமமாக இணைந்திருக்கும் சத்வ, ராஜஸ, தாமஸ குணங்களின் காரணமாக, சர்வ வல்லமை படைத்த சக்தியாக ஸ்ரீ பகளாமுகி தேவி உருவங்கொண்டிருக்கிறாள்.


எதிரிகள் செய்யும் வம்பு வழக்குகளையும், துரோகங்களையும் சண்டை சச்சரவுகள், ஏவல், பில்லி, சூனியங்களையும் முறியடித்து நிரந்தர தீர்வு காண்பதற்கு பகளாமுகி யாகத்தைவிடச் சிறந்த சக்தி வாய்ந்த மற்றொரு யாகமோ, பூஜையோ கிடையாது.


தேவியின் மூன்று குணங்களில் ஒன்றான ராஜஸ குணம் சத்ரு சம்ஹார வரத்தை வழங்கும். சத்வ குணம் மங்களசித்தி (திருமணம்), சந்தானசித்தி (குழந்தை பாக்கியம்), சௌபாக்ய தாம்பத்ய வரதானம் (மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கை) தனபாக்ய சித்தி (செல்வம்) மற்றும் ஆரோக்ய சித்தி ஆகியவற்றைத் தந்திடும். முற்பிறவியின் காரணமாக வந்துவிட்ட மஹாரோகங்கள், கெட்ட ஆவிகள், வறுமை, கடன் தொல்லை, கிரஹக் கோளாறுகளை முறியடித்து சௌக்கியங்களையும் சந்தோஷத்தையும் வழங்கும்.


சென்னையில் அமைந்துள்ள ஸ்ரீ சூர்யமங்கலம் தாந்திரீக வித்யா பீடம் தாந்திரீக விதிகளைப் பின்பற்றி பகளாமுகி யாகத்தை செய்து வருகிறது. ஸ்ரீ பகளாமுகி தேவிக்கு கட்டப்படும் கோயிலில் தாந்திரீக விதிகளை மட்டுமே பின்பற்றி பிரதிஷ்டையும் பூஜையும் செய்யப்பட வேண்டும். ஏனைய தெய்வங்களுக்குரிய தேவ சாஸ்திர விதிகளின் படியோ, ஆகம சாஸ்திர விதிகளுக்கு ஏற்பவோ ஸ்ரீ பகளாமுகி தேவிக்கு பிரதிஷ்டையோ, பூஜையோ செய்யப்படக் கூடாது. தேவியை வழிபடும்பொழுது பூஜையில் ஒரு சிறு பிழை கூட அது தேவிக்கு சினத்தை ஏற்படுத்தி கடுந்தீங்கினை விளைவிக்கும்.


தேவி பராசக்தியின் தசமஹாவித்யா என்று அறியப்படும் பத்து விதமான சொரூபங்களில் மாதங்கி, புவனேஸ்வரி, திரிபுரசுந்தரி, மகாலட்சுமி ஆகிய நான்கு சொரூபங்களும் சத்வ குணத்தை சார்ந்ததாகும். தூமாவதி, தாமஸ குணம் சார்ந்தது. ஆனால் ஸ்ரீபகளாமுகி தேவி மட்டும்தான் சத்வ, ராஜஸ, தாமஸ என்ற மூன்று குணங்களையும் ஒருங்கே அமையப் பெற்றவள். சர்வ வல்லமை படைத்த பகளாமுகி தேவி திடீரென்று கோபமடையக்கூடும், அதுபோல மகிழ்ச்சி அடையக்கூடும்.


ஸ்ரீ பகளாமுகி தேவி மஞ்சளாடை தரித்து, சர்வ ஆபரணங்கள் அணிந்து நறுமணம் கமழும் செண்பக மலர்மாலை சூடி புன்சிரிப்போடு வரதான முத்திரையுடன் தங்க சிம்மாசனத்தில் வீற்றிருப்பது தேவியின் சத்வ குணத்தை வெளிப்படுத்தும். கைகளில் முத்கரம், பாசம், வஜ்ராயுதம் ஆகியன ஏந்தி இருத்தல் ராஜஸ குணத்தை வெளிப்படுத்தும். அமாவசை நாளில் செய்யப்படும் பகளாமுகி சத்ரு சம்ஹார யாகம் முழுப்பயனை தரும். தீய விளைவுகளை அகற்றி, பகைவர்களையும் அவர்கள் ஏற்படுத்திய சிக்கல்களையும் தீர்க்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும்.


சுக்லாஷ்டமி அன்று செய்யப்படும் பகளாமுகி நவாச்சரி மந்திர யாகத்தில் செய்யப்படும் சர்வரோக சமண மந்த்ர ஹோமம், மூதாதையரின் சாபங்களாலும் முற்பிறவியில் செய்த பாவங்களாலும் ராகு தோஷத்தாலும் ஏற்படும், நோய்களையும் போக்கி நலத்தையும் பலத்தையும் தந்திடும்.


பௌர்ணமி நாளில் இரவில் செய்யப்படும் பகளாமுகி மஹா மந்த்ர யாகத்தில் பாக்ய சூக்தம், மங்கள சூக்தம் முதலான வேத மந்திரங்களால் பரமான்மை ஹோமம் செய்வது திருமண தோஷங்களை அகற்றி சுபமங்களசித்தி (திருமணம்), சந்தானசித்தி (குழந்தை பாக்கியம்), சிறந்த மணவாழ்க்கை, தனபாக்கியசித்தி, ஆரோக்கியம், மேற்படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு முதலியன தந்து அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்யும்.






சுபம்
























பகளாமுகி வழிபாடு










கம்பீராம்ச மதோன்மத்தாம் தப்த காஞ்சன ஸந்நிபாம்






சதுர்புஜாம் த்ரிணயனாம் கமலாஸன ஸம்ஸ்திதாம்


பீதாம்பரதராம் ஸாந்த்ரத்ருட பீன பயோதராம்


ஹேம குண்டல ஸம்பூஷாம் பீத சந்த்ரார்த்த சேகராம்






பீதபூஷண ஸம்பூஷாம் ஸ்வர்ணஸிம்ஹாஸனஸ்திதாம்


ஊர்த்வகேச ஜடாஜுடாம் கராளவதனாம் புஜாம்


ப்ருகுடீ பீஷணானனாம், சம்பகாரண்ய ரூபிணீம்


வாமே பாசாங்குசௌ சக்திம் தஸ்யாதஸ்தாத் வரம் சுபம்


தக்ஷிணே க்ரமதோ வஜ்ரம் கதா ஜிஹ்வா அபயாணி ச



பொருள்: பகளாமுகி தேவி அம்ருதக்கடலின் நடுவில் மணி மண்டபத்தில் ரத்னமயமான மேடையில் தங்க சிம்ஹாஸனத்தில் அல்லது தாமரை மலரில் வீற்றிருப்பவள். கம்பீரமான தோற்றமுடையவள். உருக்கி விடப்பட்ட பொன்னைப் போன்ற மேனியுடையவள். மூன்று கண்களையுடையவள். தங்க குண்டலங்களை அணிந்தவள். பிறைச் சந்திரனை சூடியுள்ளவள். மேல் நோக்கிய ஜடாபாரம் உடையவள். பயமளிக்கும் முகத்தினளாகவும், ஸெளம்ய முகத்தினாளாகவும், காட்சியளிப்பவள். நெரிக்கும் புருவத்தை உடையவள். ஒரு கையில் கதையும், மறுகையில் எதிரியின் நாக்கினையும் கொண்டவளாய் இரு கரத்தினளாகவும் காட்சியளிப்பவள். வஜ்ரம், கதை, நாக்கு, அபயம் கொண்ட நான்கு கரத்தினளாகவும் காட்சி அளிப்பவள். சம்பகவனம் போன்று திகழ்பவள். வெண்மையான, சந்திரனைப் போன்று பிரகாசமான முகத்தினை உடையவளாகிய பகளாமுகியை வணங்குகிறேன்.
மூல மந்திரம்

ஓம் ஹ்ர்லீம் பகலாமுகீ ஸர்வதுஷ்டானாம் வாசம் முகம் பதம்
ஸ்தம்பய ஜிஹ்வாம் கீலய புக்திம் விநாசய
ஹ்ர்லீம் ஓம் ஸ்வாஹா
காயத்திரி மந்திரம்

ஓம் பகலாமுக்யை வித்மஹே ஸ்தம்பின்யை ச தீமஹி
தந்நோ தேவீ ப்ரசோதயாத்






சுபம்





No comments:

Post a Comment