Friday 28 March 2014

காக்கும் காளி



கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள்.  குணம் என்றால் எப்பேர்ப்பட்ட குணம்.  அநீதி அக்கிரமம் இவைகளைக் கண்டால் சீறி எழும் குணம்.  இந்த அநீதி அக்கிரமங்களை அடக்க ஒரு ஆள் இருந்தால் தானே நியாயமும் சந்தோஷமும் நிலவ முடியும்.

அப்பேர்பட்ட சக்தியாக இருந்து நம்மைக் காப்பவளே காளி என்ற சக்தி.  இவளைப்பற்றி விவரிக்க வேண்டுமானால் இவள் என்ன ரூபமானவள் எப்படிப்பட்டவள் என்றெல்லாம் குறிப்பிடவேண்டும். எல்லாமாக வியாபித்து இருப்பவளுக்கு உருவம் ஏது?   நல்ல தேவ சக்திகள், தீய அசுர சக்திகள் இரண்டுக்கும் அவளே காரணம் என்றாலும், இந்த சக்திகளின் மோதல் நாடகம் கட்டுக்கடங்காமல் போய் இந்த நல்லவர்கள் அடியோடு நசித்து விட அவள் அனுமதிக்க மாட்டாள்.

அசுர சக்திகளின் கை ஓங்கி, தேவ சக்திகளின் கை ஒடுங்கும்போது தேவர்கள் தன்னை தேடி வரும்படி செய்வாள்.  அவள் எதிர்பாராது ஏற்படும் துன்பங்களை நாசம் செய்பவள் ஆதலால் அவளுக்கு "ஈதி பாதாவினாசிநீ" என்ற பெயர் லலிதா த்ரிசதியில் இருக்கிறது.

காளி பூமி பாரம் தீர்க்க உருவெடுத்தவள்.  பூமாதேவிக்கு எவ்வளவோ பொருள்களை அவள் தாங்கினாலும் அது பாரமாக தோன்றவில்லை.  ஆனால் அநீதியாளர்கள்  அக்கிரமம் செய்பவர்கள் இவர்களை பூமாதேவியினால் தாங்க முடிவதில்லை.  எவர்கள் கொடும் துன்பங்களை பிறருக்கு விளைவிக்கிறார்களோ அவர்கள் பூமிக்கு பாரம்.  இவர்களை ஒழித்துக்கட்டவே அம்பிகை காளியானாள்.

அன்னை காளிமாதவை வணங்கி அவள் அருள் பெறுவோமாக.

No comments:

Post a Comment