Thursday 29 January 2015

காளி உபாஸநா

க்ஷினகாளி உபாஸநா 

1.     காளிஉபாசநா
2.     காளி வழிபாட்டின் முக்கியமான க்ரமங்கள்
3.     குருவின்  கருணை
4.     நித்ய பூஜை
5.     ஜபம் செய்யும் முறை.

                                                                கடவுள் வாழ்த்து
                                           ஓம் காராய பிரணவ ரூபாய
                                           விக்ன நாஸாய நமோ நம:
                                           ஸ்ரீ மாத்ரவே ஸ்ரீ பித்ரவே
                                           ஸ்ரீ குரவே நமோ நம:
                                            சிவாயை  சிவசக்தி ரூபாயை
                                            நமச்சிவாயை நமோ நம:
                                            நாராயணாயை லக்ஷ்மிகாந்தாயை    
                                            க்ருஷ்ணாயை  நமோ நம:
                                            ராமாயை ராம தூதாயை
                                            வாயுபுத்ராயை நமோ நம:
                                            சரவணபவாயை மங்களரூபாயை
                                            பூமிபுத்ராயை நமோ நம:
                                            நவ காள்யை நவ கோள்யை
                                            நவ துர்காயை நமோ நம:
                                            சூர்யாயை சந்த்ராயை
                                            காயத்த்ரியை நமோ நம:

1.     காளிஉபாசநா

ரிது அரிது மானிடறாய் பிறத்தல் அரிது.

எளிதில்  பெற  இயலாதது   இந்த  மானிட  ஜன்மம் .நாம் செய்த பூர்வ புண்யங்களால்  நமக்குக்  கிடைத்திருக்கும் ஒரு வரப்ரசாதம்.   இந்த மானிட வாழ்க்கையில்   நாம்  பெற  வேண்டிய  நான்கு புருஷார்தங்களாகிய தர்மம், அர்த்தம், காமம்,  மோக்ஷம், என்கிற  நான்கு புருஷார்த்தங்களுள் முக்தி (மோக்ஷம்) பெறுதலே  தலையாயது.

புருஷார்த்தம்' என்றால், ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் அடையவேண்டிய குறிக்கோளாகும்.  தர்மம்,  அர்த்தம்,  காமம்,  மோட்சம்  என்ற நான்கும்  சதுர்வித புருஷார்த்தங்கள் ' என்று கூறுவர். இதனை  அறம், பொருள், இன்பம், வீடு என்று  தமிழிலும் சொல்லப்பட்டுள்ளன.




இந்த நான்கு புருஷார்தங்களைப்பற்றி  சிருங்கேரி ஸ்ரீசந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் மிக அழகாக  விளக்கியுள்ளார்:-

தர்மம்:      நல்ல செயல்களை மட்டுமே  செய்வதால் கிடைக்கும் நல்ல புண்ணிய பலன் தான் தர்மம் ஆகும். (அறம்) இது ஒன்று தான் ஓர் ஆத்மாவைத் தாழ விடாமல் தூக்கி நிற்க  வைக்கும்.

அர்த்தம்:    இது செல்வத்தைக் குறிக்கும், தர்மத்தை விரும்புபவர்கள் செல்வத்தை ஈட்டி நற்காரியங்கள் செய்வதற்கும் பிறர்க்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் அவசியம் தேவைப்படுகிறது.  அதனை நியாயமான வழிகளில் ஈட்டுதலே அர்த்தம் என்பதாகும்.

காமம்:      செல்வத்தை ஈட்டி விட்டால் 'ஒருவன்' பொருள்களின் மீது மிகுந்த ஆசை வைக்கிறான்.   ஆசைதான் காமம்.  காமம் சிற்றின்பத்தை மட்டுமே தரும்.  மேற்கூறிய  இந்த மூன்று புருஷார்த்தங்களும்  'த்ரி வர்க்கம்' என்று சொல்லப்படுகின்றன. காரணம் இவை மூன்றும் - வளரும் - இருக்கும்-அழியும் தன்மை உடையவை.   இவை நிலை யற்றவை. கர்மா சம்பந்த மானவை.

நான்காவது புருஷார்த்தமாகிய மோக்ஷமே   நிலையானது.   பேரின்பத்தைத்  தரக்கூடியது. மற்ற மூன்று புருஷார்த்தங்களை விட மிக உயர்ந்தது. இதையே முக்தி, (விடுதலை) அம்ருதம் (அழிவற்ற) கைவல்யம் (முழுத்தன்மை),நிர்வாணம் (பேரின்பம்), என்ற பிற சொற்களாலும் (நிச்ரேயஸம்)  என்றும் சொல்லப்படுகிறது.   இதனை  ஞானத்தினால் மட்டுமே பெறமுடியும்.

மகரிஷிகள் மற்றும் நம் முன்னோர்கள்  நாம் முக்தி  பெற பல எளிய மார்க்கங்களைக் காட்டியுள்ளார்கள்.  முக்தி பெற மூல ஸாதனம் ஆத்ம ஞாநம் பெறுதலே. சம்சாரசாகரத்தில் ஈடுபடும் நாம் வாழ்க்கைப் பாதையில் பல இக்கட்டான சூழ்நிலை களைக் கடந்து வர வேண்டியிருக்கும்.   இந்த சூழ்நிலையிலிருந்து  நாம் எளிதாக விடுபட நமக்கு  தெய்வ அருள் அவசியம் வேண்டும்.

 அந்த தெய்வ அருளையும்  ஆத்ம ஞாநத்தையும்  பெற நாம் ஏதாகிலும் ஒரு இஷ்டதேவதா  மூர்த்தியை தேர்ந்தெடுத்து பூரண நம்பிக்கையுடன் அந்த தெய்வத்தின்  உபாசனா முறையை தெளிவர கற்றுக் கொள்ளவேண்டும்.   இந்த உபாஸநையின் மூல மாகத்தான் அந்த தெய்வத்தின் ஆருளை  நாம் பூரணமாக பெற முடியும். இதனால் நாம் வாழ்க்கை பாதையில் சந்திக்கும் சகல இன்னல் களையும் கடந்து ஒரு  உன்னதமான தெளிவான சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கடைசியில் முக்தி பெறவும் வழி வகுக்கும்.

ரிஷிகள் மற்றும் நம் முன்னோர்கள் நம் நன்மைக்காக சில வழிமுறைகளை வகுத்துள்ளார்கள். அவர்கள்  உறைப்படி ஸக்தி வழிப்பாட்டை மையமாகக் கொண்ட ஸாக்த மதத்தில் உபதேசிக்கப்பட்ட தசமஹாவித்யைகளாகிய  காளி, தாரா, சுந்தரி, பைரவி, புவனேஸ்வரி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகீ, மாதங்கி, கமலாத்மிகா ஆகிய வித்தைகளில் முதன்மை யான வித்தையான காளி வித்தையே மிகச் சிறந்தது என்று பறிந்துரத்துள்ளனர். 

காளிமாதாவை சித்தகாலி, மகாகாளி, குஹ்யகாளி, பத்ரகாளி, ரக்தகாளி, ஸ்மசானகாளி, ரக்ஷாகாளி, தக்ஷிணகாளி என பல ஸ்வரூபங்களில் வழிபடுகிரார்கள்.  வழிபடும் முறை ஒவ்வொன்றிற்கும் வேறுபடுகிறது.  இந்த மூர்த்தி பேதங்களுள் ஸுக்த சத்துவ பிரதான லக்ஷண ஸ்வரூபம் கொண்ட உபாசநைக்கு மிகவும் ஏற்ற மூர்த்தி   ஸ்ரீ தக்ஷிண காளிகையே  என்று நிர்ணயித்துள்ளார்கள்.

தக்ஷினகாளிகைக்கு பவதாரிணீ  என்ற சிறப்பு நாமமும் உண்டு. இந்த உலகத்தை ஆள்பவள் என்று பொருள். கலியுகத்தில் நம்மை காக்க உள்ள கருணாமூர்த்தி.   அந்த தக்ஷிண காளிகையின் அருளை வேண்டி நம்மால் முடிந்த முயற்சிகளை செய்து இந்த உபாசனாக்கிரமத்தில் வெற்றி பெறுவோமாக.

                                                            

  2.   காளி வழிபாட்டின் முக்கியமான க்ரமங்கள்


                                           

இப்பூவுலகில்   சக்தி   வழிபாட்டு முறை தோன்றிய   காலத்தில்  ஸ்ரீ காளி தேவியின் வழிப்பாட்டு  முறை  தான் முதன் முதலில் வழக்கத்திற்கு      வந்தது.      காளிமாதேவியை    தேர்ந்தெடுக்க காரணமான  சில முக்யமான அம்சங்களை இங்கே காண்போம்


ஸ்ரீ காளிமாதா   பயங்கரமான உருவத் தோற்றம் கொண்டவள் அவள் கையில் கொண்டுள்ள  பொருள்களும்,   தரித்திருக்கும்  ஆபரணங்களும் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். அவள் ஒரு பயங்கரி, உக்கிரகமானவள்  என்று நினைத்து அவள் உருவப் படத்தைக்கூட வீட்டில் வைத்து வழிபட அஞ்சுவர்.

உண்மைமையில்  ஆனந்தமும் பிரேமையும் நிறைந்த கருணாமூர்த்தியாகிய இந்த  தேவியைக்கண்டு  நாம் சற்றும் பயப்படத் தேவை இல்லை.   அவளுடைய  தோற்றமும் ஆபரணங்களும் மற்றும் ஸ்வரூபத்தில்  உள்ள  பல லக்ஷணங்களும்  வேதாந்த ஸாரமான கருத்துக்கள், மந்தரசாஸ்திர தத்துவங்கள் ஆகிய இவற்றை அடிப்படையாக கொண்ட குறிப்புகளாகும்.

உதாரணமாக  தேவியின் விரிந்து பரவி ஆடிக்கொண்டிருக்கும்  கூந்தல் இவள் கட்டிலடங்காநிலையில் உள்ள பரம்பொருளின் ஸ்வரூபத்தினள் என்ற உண்மையை குரிப்பதாகும்.

இவள் உடலில் வஸ்த்ரம் இன்றி இருப்பது இவள் குணங்கடந்த கோலத்தினள்,  நிர்குணஸ்வரூபிணீ என்ற தத்துவத்தை குறிப்பதாகும்.

இவள் இடது மேற்கரத்தில் தாங்கும் வாள் ஞான சக்தியின் சின்னமாகும்.

இடதுகீழ்  கரத்தில் உள்ள வெட்டப்பட்ட சிரஸானது   ஒரு யோகியானவன்  பிரபஞ்சத்தில் எல்லா பற்றுகளும் துறந்து ஆனந்த நிலையில் திளைத் திருப்பதைக் காட்டும் சின்னமாகும்.

மேலும், இவள்  தன் இடுப்பில் வெட்டப்பட்ட கரங்களை  கோத்த  மேகலையை  தரித்திருப்பது கர்மயோக ஸித்தியின்  மகிமையை  காட்டும் சின்னமாகும்.

இவள்  ஸ்ரீ மஹாகாளரின் இதயத்தில் வலப்பாதம் வைத்து ஸதா ஆடிக் கொண்டிருப்பது  ஜீவன்முக்தனின்  நித்யானந்த நிலையைக்  காட்டுகிறது.   

பரம கருணாமூர்த்தியாகிய இந்த தேவி, தன் குழந்தைகளாகிய எல்லா  ஜீவன்களையும்  ரக்ஷிக்கும் ஆனந்தத்தில்  திளைத்து மகிழ்ந்து ஆடிய வண்ணம் அருளைப் பொழிகின்ற வேளையில், தனது வலது பாதத்தை  தன்  அன்பு நாயகராகிய மகாகாளரின் ஹ்ருதய ஸ்தானதிலே அமர்த்துகிறாள்.   தன் பிரிய தேவியின் பாதத்தை தாங்கி களிப்படையும்   ஸ்ரீ மஹாகாளர், தேவியின்  அருட்செயலின் ஆற்றலைக் கண்டு தன் இயல்பான இயக்கம்
செயல் அற்றுப் போவதை உணர்கிறார்.  செயலற்றுப் போன மஹாகாளர் ஒரு சவம் போல் கீழே கிடந்து தேவியின் ஆனந்த கூத்தை   பேரின்பத்துடன்  அனுபவித்துக் கொண்டிருக்கிரார்.


இந்த  நிலையை தியானிக்கும், எந்த உபாசகனும் தானும் அந்த மகிழ்ச்சிப் பரவசத்தில் மூழ்கி சிவத்துவம் அடைவானே தவிர பீதிக்கு இரையாக மாட்டான்.


இந்த தேவியின் வழிப்பாட்டுக்  கிரமத்தில் பலியிடுதல் ஒரு அம்சமாகும்.   ஜீவன்களை கொன்று அர்ப்பணித்தல் தான்  பலி என்று  நாம் கருதக்கூடாது.  தேவியைஉபாசிப்பவர்கள் தங்களுள் குடிகொண்டிருக்கும்  காமம்,  குரோதம், லோபம், மோகம், மதம் மாற்சரியம் ஆகிய ஆறு  உட்பகைவர்களை
தேவியின்  மந்தர  ஜபம்  என்கிற  ஹோம  அக்னியில்  அர்ப்பணித்தலே  பலியிடுதல் ஆகும்.

காளி தேவியின் மூல மந்திரத்துக்கு " வித்யாராஜ்ஞீ " என்று பெயர்  அதாவது வித்யைகளுக்கெல்லாம் "பேரரசி" என்கிறது காளி தந்த்ரம்.  எந்த ஒரு தெய்வ வழிபாட்டிற்கும்  பிரதான மானது அதன் மூலசக்தியே.  இந்த மூலசக்தி பல பாதைகளில் இயங்கி பல ஸ்வரூபங்கள் கொள்கிறது.  அவற்ரில் எல்லாம்
இந்த மந்திரத்தின் வலிமையே இயக்கும் சக்தியாக  விளங்கு வதால் இந்தமூல சக்திமூர்த்தியே மேலானது.  இதுவே பராசக்தி மூர்த்தி என்று காளி தந்திரத்தில் வலியுறுத்தப்படுகிறது.

ஆதிகாலம் முதல் பராசக்தியின் வழிபாட்டு கிரமங்கள்  1.காளி 2. தாரா   3. சுந்தரி  4. புவனேஸ்வரி  5.பைரவி  6.சின்னமஸ்தா 7. தூமாவதி   8.பகளாமுகி  9. மாதங்கி  10.. கமலாத்மிகா என்ற பத்து மூர்த்திகளின்   உபாஸனை  முறைகளாக பழக்கத்தில்  இருந்து வருகின்றன.


இந்த வித்தைகளை  " தச மஹா வித்யா " என்று அழைப்பார்கள். இவைகளுள்  காளி  வழிபாடே முதன்மையானதாக  உள்ளதால் காளியை  ஆதிபராசக்தி என்று  வழங்குவது மரபாயிற்று.

வட நாட்டில் காளிவித்யா வாமாச்சாரமாக தாந்த்ரீக முறையில் அனுஷ்டிக்கப் படுகிறது.  ஆனால்  நாம் தக்ஷிணாசாரமாக உபநிஷத்து, வேதங்கள்,  மற்றும்  சூக்தங்கள்  அடிப்படையில் உபாசிக்கிறோம்.

கைலாசத்தில் ஒருமுறை முப்பத்து முக்கோடி தேவர்கள் புடைசூழ மஹாகாளர் காளிகையை விஸ்தாரமாக பூஜித்துக்கொண்டிருந்தார்.  அப்போது   தேவி காளிகை  அவர்கள் முன்  தோன்றி  உடனேயே மறைந்துவிடுகிறாள்.     மஹாகாளர்  மீண்டும்  சமஷ்டியாக, தன்பூஜையில்  பங்கேற்க  வந்த   ஸ்ரீ   லலிதா திருபுரசுந்தரி உள்ளிட்ட அனைவரும் மிக தீவிரமாக பிரார்த்திக்க,  காளி தேவி மனமிரங்கி மறுபடியும்  ஆவிர்பவித்து அநுக்ரஹிக்கிறாள்.     அந்த சமயத்தில் ஸ்ரீ லலிதா  திருபுரசுந்தரி காளிகையிடம் தனக்கு சக்தி யை வரமாக அருளவேண்டும்  என்று பிரார்த்திக்க,  காளிகாதேவி கருணையுடன் " என்னுடைய  சஹஸ்ரநாமம் ஸ்தோத்ரம்  என்னால் பூர்வத்தில் அமைக்கப்பட்டுள்ளது.   அதனை  முறைப்படி பாராயணம்  செய்து  வந்தால் பூரண  "சக்தி"   ஏற்படும் " என்று திருவாய் மலர்ந்து அருளி  மறைந்தனள்.


அன்று முதல்  ஸ்ரீ லலிதா  திருபுரசுந்தரி " ஸ்ரீ  ஸர்வஸாம்ராஜ்யமேதா"  என்று அழைக்கப்படும்  ஸஹஸ்ரநாம  ஸ்தோத்ரத்தை பக்தியுடன்  பாராயணம் செய்து  வருவதால்  பூரணசக்தி பெற்று சக்தியில்லையேல் சிவம்  இல்லை என்று கூறும்  அளவிற்கு  தன் அருளை  பொழிகிறாள்.

சக்தி, மற்றும் காளி உபாசகருக்கு இந்த  மந்த்ர ஸ்தோத்ரங்கள் தேவி  நமக்கு கொடுத்திருக்கும் வரமாகும்.  அனைவருக்கும் உபாசனை வெற்றி பெற சக்தியும் சகல சௌபாக்கியங்களையும் கொடுத்து  அருளுகிறாள்  ஆக இந்த வித்யாக்ரமத்தில் உபாசகன் தன்னால்  இயன்ற   பூஜை, ஹோமம், தர்ப்பணம், யோகினி  ஸந்தர்பணைகளும்  , பரோபகாரமும்,  எப்பொழுதும்  காளி தேவியின் ப்ரேம த்யானத்துடன்  மந்தர ஜபங்களும்  குருவின் தேவைகளையும்  வேண்டிய உதவிகளையும் செய்து வந்தாலே   போதுமானதாகும்.


3. குருவின்  கருணை


சரீரம், பிரபஞ்சம், மனஸ்,  , தேவதை ஆகிய இவ்வைந்தும் குரு தத்துவத்தின் "பஞ்ச ப்ராணாலீ" எனப்படும். ஸாதகன் சரீரத்தின் மூலம் பிரபஞ்சத்தை உணர்கிறான்.  சரீரத்தையும்  பிரபஞ்சத்தையும் உணர்ந்த பிறகு மனஸ்ஸின் குணங்களையும் சக்திகளையும்  உணர்கிறான்.  மனஸ்ஸின் சக்தியால் ஆத்மாவை உணர்கிறான். அதன் மூலம் தேவதையை உணர்கிறான். இதற்கெல்லாம் குருவின் கருணையான உபதேசமே காரணம். ஆதலின் ஸ்தூல சரீரத்தின் உதவியால் ஸுஷ்ம சரீரத்தின் தன்மைகளை உணர்ந்து அதன் மூலம் தேவதையின் ஸ்வரூபத்தை உணர்கிறான். இவையெல்லாம் குருவின் அன்பிலிருந்து  சுரக்கும்.

உலகத்தின் ஆதிதான்த்ரிகர், ஆதி சாக்தர், ஆதி குரு  மஹாகாளர்.  ஆதி சக்தி காளி, கால சக்தி. அடிப்படையாக சாக்தனின் தேவதை ஸ்த்ரீ.  ஒவ்வொரு ஸ்த்ரியும் காளி.  ஸ்திரீயுடன் எந்தவித தொடர்பும் காளி பூஜையே. "தான் காளியே" என்று உணர்வதால் ஒவ்வொரு சாக்தனும் ஸ்திரீயே. ஆகையால் ஒவ்வொரு உண்மையான காளிபக்தன் எந்த ஒரு கன்னிகைக்கோ, ஸ்திரீயுக்கோ செய்யும் எச்செயலும் காளிகைக்கு செய்யும்  உபசார கைங்கர்யமாக பாவித்துச் செய்யவேண்டும். மேலும் மனோ வாக்கு காயங்களால் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் காளிக்கே அர்ப்பணம் செய்யவேண்டும்.



ஸ்ரீ குரு தத்துவம்



குருப்பிரம்மா குருவிஷ்ணு குருதேவோ மஹேஸ்வர:

குருசாக்ஷாத் பரஹ்பிரம்மம் தஸ்மை ஸ்ரீ குரவே நம:"


குரு என்ற  பதத்திற்கு ஆத்ம ஜ்ஞாநம் அருள்பவர் என்று பொருள். ஸரீரத்தைக் குறிப்பதல்ல. ஆத்மாவிற்கு நீளம் அகலம் உயரம் என்ற பரிமாணங்கள் கிடையாது.

குருவை நாம் பிரார்த்திக்கும் போது முதலில் நிர்குணமாய் இருந்தவர், பின்னர்   நம்   பால்  கருணை  கூர்ந்து  ஸகுண ஸ்வரூபம்  எடுத்து நம்மை  உய்விக்க வந்துள்ளார்  எனறு மிக அன்புடன் தியானிக்கவேண்டும்.

குருநாதர் தான் பரப்பிரம்மம். அவருடைய முதல் லக்ஷணம் கருணை.  மற்றவர்கள் செய்ய லஜ்ஜை படும் செயலைக்கூட சிஷ்யனுக்காகச் செய்பவர் தான் குரு.  தன்  சிஷ்யனுக்காக தன் நிலையிலிருந்து  கீழ் இறங்கி  அவனை  எப்படியாவது கை தூக்கிவிடுவார்.    பரப்பிரம்மத்திற்கு  " ஜீவர்கள்  எப்படி
யாவது முக்தி பெற வேண்டும் என்ற நினைப்பே எப்போதும் மேலோங்கி நிற்கும்.

தேவர்களை நாம் யக்ஞங்கள் மூலம் ஆராதிக்க வேண்டும். யக்ஜங்களுள் ஜப  யக்ஜமே சிறந்தது.    ஜபத்தின்   பிரதான அங்கம் மந்திரம். மந்திரத்தை நமக்கு உபதேசித்து  அதனை ஜபிக்கவேடிய முறைகளை  அவரே கடைப்பிடித்து நமக்கு வழி முறைகளை வகுத்துக்கொடுத்து உதவுபவர்.

குருவின் பாதங்களில் பூரண சரணாகதி அடைந்து அவருக்கு பூரண திருப்தி வருமாறு உதவிகள் செய்துக்கொடுத்து அவர் ஓய்வாக   இருக்குக்போது   விநயமாக   கேள்விகள்   கேட்டு சாஸ்திர விஷயங்களை அவருடைய உபதேச அனுக்ரஹம் மூலமாக கிடைக்கப்பெட்று தெளிந்து உய்ய வேண்டும்.

" எவனொருவனுக்கு   பகவானிடத்தில்  மேலான  பக்தி 
   இருக்கிறதோ,     பகவானிடத்தில்   இருப்பதே    போல்  
   குருவிநிடத்திலும்    பரம   பக்தி   இருக்கிறதோ   அந்த  
   மஹாத்மாவிற்கு      எல்லா     பரம       ரஹஸ்யமான
   உண்மைகளும் முழுமையாக தாமாகவே ஸ்புரிக்கும்"

மஹாவாக்கியம்

வாக்கில் அடங்காத மிகப் பெரிய விஷயத்தை வாக்கில் வரும் படியாக வரவழைத்து  சிஷ்யனுக்கு உபதேசித்து விளக்குபவர் குரு.

தத்த்வமஸி  என்ற வாக்கியம் ஸாமவேதத்தின் சாரம்ஜீவாத்மாவாகிய   நீயேதான்   அதுவாகிய     பரமாத்மா ஆகிறாய் என்ற கருத்தே இந்த வாக்யத்தின் ஸாராம்சம்.

அஹம் ப்ரஹ்மாஸ்மி   இது யஜுர்வேதத்தின்  ஸாரம் மேற் குறித்த  தத்துவத்தை  கேட்டு  தெளிந்த  சிஷ்யன் அதனை இன்னும் தெளிவாக உணர்கிறான்.

அயமாத்மா ப்ரஹ்ம   இது அதர்வண வேதத்தின் ஸாரம் மேலும் மேற்குறிப்பிட்டபடி   தெளிந்த சிஷ்யனுக்கு குரு விளக்குகிறார்  " இந்த ஜீவாத்மா  பரப்பிரம்ம   ஸ்வரூபம் ஆகிய  பரமாத்மாவேதான் இது திண்ணம் என்று உறுதிப் படுத்துகிறார்.

ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம       இது    ருக்வேதத்தின் ஸாரம் மேற்சொன்ன    மூன்று    வாக்கியங்களின்     திரண்ட பொருளே இந்த வாக்கியத்தின் ஸாராம்சம்.

மேற்கண்ட நான்கு வாக்கியங்களின் திரண்ட பொருளான " ஜீவ- ப்ரஹ்ம  அபேதம்" என்ற  உண்மையை   தெளிவாக உணர்தலே   ஒரு   ஜீவன்   தன்னைப்  பரப்ரஹ்மமாகவே அறிந்து தெளியக் காரணமாகிறது.


4.   நித்ய பூஜை


மனித வாழ்கைக்கு வாழ்வாதாரமாக இருப்பது கடவுள் நம்பிக்கை. ஆனால் நாம் அந்தக் கடவுளை ஒரு பிரச்சனை என்றால் தான் நினைக்கிறோம். நாம் கடவுளை, இஷ்டதெய்வத்தை ஒரு சில நிமிஷங்களாவது வணங்க வழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும்.  குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே இந்த பழக்கத்தை கற்றுக் கொடுக்கவேண்டும்.   


 நாம் தினசரி பல காரியங்களுக்கு நேரம் ஒதுக்குகிறோம்.  ஆனால் கடவுளை வழிபட மட்டும் நேரம் கிடைப்பதில்லை. தினசரி சில நிமிழங்களாவது  கடவுளுக்காக நேரத்தை ஒதுக்கி முடிந்தால் குடும்பத்தினருடன் கூட்டாக கடவுள் வழிபாடு செய்யவேண்டும்.  காலை வேளை மிக உகந்தது. தினந்தோறும்  குரு, குலதெய்வம், மற்றும் பெற்றோர், இஷ்ட  தெய்வம், ஆகியோரை வணங்குதல் நன்று.  ஸ்தோத்திர பாராயணங்கள், பாடல்கள்,   ஆகியவற்றை உங்கள் சௌகரியம் போல்   செய்தல் நன்று.  நாம் கடவுளுக்கு நன்றி கூறி, நம் தவறுகளுக்கு மன்னிப்பு கோரி  நம்மால் இயன்றதை நிவேதனமாக படைத்து   ஆரத்தியுடன்  பூஜையை நிறைவு செய்யலாம். 

ஏதாவது இஷ்டதெயவ உபாஸன முறையை கடைப்பிடிக்க விரும்புபவர்கள்  ஒரு குருவின் மூலம் மந்திர உபதேசம் பெற்று  அவர் அறிவுரைப்படி பூஜைகளை மேற்கொள்வது நன்று.. 

காளி உபாசனை செய்பவர்கள்   இஷ்ட தெய்வமான காளிகைக்கு  தினமும் அஷ்டோத்ர அர்ச்சனை, காயத்த்ரி, மூலமந்திர ஜபம், ஆகியவற்றை செய்தல் நன்று.   மாதத்தின் முக்கியமான நாட்களில், அதாவது அஷ்டமி, நவமி, அம்மாவாசை, பௌர்ணமி, ஆகிய தினங்களில் மற்ற பண்டிகை நாட்களில் மற்ற  ஸ்தோத்திரங்களையும் மந்திரங்களையும் கிடைக்கும் அவகாஸத்திற்கு ஏற்றாற்போல் பாராயணம் செய்யலாம்.  காளியின்  ஸஹஸ்ரநாம பாராயணம் மேற்கொள்வது மிகவும் சிறந்தது. அதனால் கிடைக்கும் பலன்கள் அளவிடமுடியாதது.  இதனைப்பற்றி விரிவாக வேறு பக்கத்தில் உரைத்துள்ளேன் 

பூஜை செய்யும் வேளையில்  மனமொன்றி  தெய்வத்தை பிரார்த்தனை மற்றும் பூஜை செய்ய வேண்டும்.  தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட வேளையை  பூஜை மற்றும் ஜபம் செய்வதற்கு ஒதுக்குவது நன்று.  ஆரம்பத்தில் இது கஷ்டமாக இருந்தாலும் சிலநாட்களில் பழகிவிடும். 

காளி உபாசனை மேற்கொள்கிறவர்கள் மேற்கூறியவற்றை கடைபிடித்து. தினந்தோறும் தவராமல் காளி காயத்த்ரி, மூலமந்திர ஜபத்தினை முறைப்படி செய்தல் நன்று.  


காளிகாம்பாளை  பூஜித்து பரிபூரண பலன்களை பெறுவீர். 



5.  ஜபம் செய்யும் முறை.


ஜபம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரம்ம முஹூர்தம் அதாவது சூரியன் உதிப்பதற்கு 3 மணி நேரம் முன்.  சுமார்  காலை  4 1/2 மணி அளவில் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு ஜபத்தினை  ஆரம்பிக்கலாம்.

ஜபம் செய்ய பொன், அல்லது முத்து பவழம் ஆகிய ரத்ன மணி, ருத்ராக்ஷம், ஸ்படிகம், தாமரை மணி, துளசி மணி, இவற்றாலான அக்ஷமாலையை கை யிற்கொண்டு, இவை  இல்லாத நிலையில் கர மாலையைக்கொண்டு, அதாவது ஒவ்வொரு ஸங்க்யைக்கு ஒவ்வொரு அக்ஷமாக (அல்லது விரற்கணுவாக) உருட்டிக் கொண்டு, மேல் வஸ்திரத்தினால் இரு கைகளையும் மறைத்துக்கொண்டு, மார்பகத்தின் மத்தியில் ஸங்க்யை எண்ணும் வலது கையை வைத்துக் கொண்டு, நிதானமாக ஸங்க்யை விடாமல் எண்ணிக்கொண்டு தியான ஸ்லோகத்தில் வர்ணிக்கப்பட்ட ஸ்வரூபத்தை பிரேமையுடன் மானசீகமாக தியானித்துக்கொண்டு மௌனமாக ஜபிக்கவேண்டும்.

கிழக்கு அல்லது வடக்கு நோக்கி மரத்தினால் ஆன சிறிய ஆசனத்தில் அமர்ந்து  ஜபம் செய்தல் நன்று.

                       
சுபம்                         




1 comment:

  1. உபாசனையில் நாட்டம் உள்ளவர்களுக்கு உபயோகமான மற்றும் அரிதான தகவல்களை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete