Tuesday 7 January 2014

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (40)



855.   குலபாலீ 

குலஸாதக  ஸமூஹத்தை  எல்லா வகைகளிலும் பரிபாலித்து  அருளும் அநுக்ரஹ மூர்த்தி.

856.   குலவதீ 

மநு, சந்திரன், குபேரன், மன்மதன், ருத்ரன், லோபாமுத்திரை, அகஸ்தியர், நந்தீ, இந்த்ரன், ஸ்கந்தன், மஹாகாலர்,  துர்வாசர்,  வ்யாஸர், ஸூர்யன், வஸிஷ்டர், பராஸர், ஔரவர், அக்னி, யமன், வருணன், வாயு, விஷ்ணு, கணபதி, ப்ரஹ்மா காலபைரவர், ப்ருகு,  பரத்வாஜர் முதலிய பல்லாயிரக் கணக்கான குல ஸாதகர்களின்  குழாம் சதா தன்னை புடை சூழ எப்பொழுதுமே யோகினி மண்டல ப்ருந்தாரிகையாகவே தன் பக்தர்களுடனேயே  ஸர்வ  ஸல்லாபமாக அளவளாவி ஸம்பாஷித்துக் கொண்டே இருப்பதில் பெரிதும் மச்கிழ்சி கொள்பவள்.  

857.   குலதீபிகா  

தரையில் அக்னி சக்கரம் வரைந்து அதன் மீது தூய வெண்மையான அரிசி மாவினால் "ஸூர்யன்" "சந்தரன்"  ஆகிய இரு வட்டமான ஜ்யோதிர்  மண்டலா காரங்கள் அமைத்து, ஸ்தாபித்து, தூய வெண்மையான பருத்தியினால் அவற்றின் மத்தியின்  ஊர்த்வ முகமான வர்த்திகள் அமைத்து, அவ்விரு வர்த்திகளையும் தீபம் ஏற்றி, ஜ்வாலைகளில்  தன்னை ஆவாஹனம் செய்து ஆராதிக்கும் தன் பக்தனையும் அவன் குலத்தையும் ஆட்கொண்டு அருள்பவள்.  (  இந்த முறையை சாதாரணமாக மாவிளக்கு  ஏற்றுவது என்று கூறுவது வழக்கமாம்.)

858.    குலயோகேஸ்வரீ 

யோகிகளின் மூலாதாரத்தில்  ஸர்ப்ப குண்டல ரூபத்தில் வட்டமாக வளைந்து உறங்கிக் கொண்டிருப்பது போல் நிஸ்சலமாக இருந்து  கொண்டு அவன் தன்னை  த்யானம்  செய்யத் துடங்கியவுடன் சுரு சுரு என்று மேலே எழும்பி, மேருதண்டத்தை சுற்றி சுழன்று சுழன்று ஸ்வாதிஷ்டானம், மணிபூரஹம், அநாஹதம், விஸுக்தி, ஆஜ்ஞா  ஆகிய சக்ர தளங்கள் வழியாக ஒவ்வொன்றிலும் நின்று, மேலே தொடர்ந்து பிறகு லலாடப்ரதேசத்தில் உள்ள ஒன்பது உபாதி ஸ்தானங்களைக் கடந்து, ஸஹ்ஸ்ராரம் அடைந்து அங்கு த்வாதஸ தள கமலத்தின் மத்தியில், ப்ரஹ்மரந்திர கமலத்தின் கர்ணிகா ஸ்தானத்தில்  வீற்றிருக்கும் தன்னை குரு ஸ்வரூபிணீயாகக் கொண்டு அனன்யமாக சரணமடையும் போக்கில், யோகத்தில் அமர்ந்திருக்கும் குல ஸாதகனான தன் பக்தனுக்கு சீக்கிரம் எளிதில் லய யோக ஸித்தி ஏற்பட்டு, இஷ்டதேவதா  தன்மயத்வம் கிடைக்கப்பெற்று அவன்,  ஜீவன் முக்தனாக அநுக்ரஹிக்கும் குண்டலினி யோகேஸ்வரி.        

859.   குண்டா

இந்தப் பரந்த ப்ரபஞ்ஜத்தில் அடங்கிய  எல்லா க்ரஹ  நக்ஷத்ராதாதி கோளங்களையும் தன்னுள்  தாங்கி எல்லா  சேதனா சேதனங்களையும் காப்பாற்றி நிர்வஹிக்கும் ஆகாஸ மூர்த்தி.  

860.   குங்குமாருணவிக்ரஹா

குங்குமம் போல் ஸிவந்த மேனியாகவும் சில சமயங்களில் ஆவீர்பாவித்து அருள்பவள்.  கௌமாரி என்ற தேவதை சிவந்த நிறத்தினள் ஆவாள்.

861.   குங்குமானந்த ஸந்தோஷா

தன் பக்தன் தன்னை குங்குமத்தினால் அர்ச்சிப்பதில் அளவிலா ஆனந்தம் அடைவதைக் கண்டு சந்தோஷம்  அடைந்து அவனை ஆட்கொண்டு  அருள்பவள்.  

862.   குங்குமார்ணவ வாஸினீ

தன் பக்தன் தன்னை குங்குமத்தால் அர்ச்சித்து அக்குங்குமம் அவன் பார்வையில் ஒரு சிவந்த ஸமுத்திரம் போல் காட்சி அளிக்குங்கால், அந்த குங்கும ஸமுத்திரத்திலேயே, அப்படியே அதனுள் வந்துரைந்து அவன் மனதிற்கு மட்டில்லா  மகிழ்ச்சி அளிக்கும் ப்ரேம மூர்த்தி. 

863.   குஸுமா

மாத்ருகா மண்டலத்தில் அமர்ந்துள்ள ஐம்பத்தொரு மாத்ருகைகள் ஒவ்வொன்றிலும் தானே உகப்பாக பூரண  ஸாந்நித்தியம் கொண்டு வித்யோபாஸகர்கள் உபாஸிக்கும் எல்லா  மந்த்ரங்களிலும் ஆனந்தமாக உறைந்து அவர்களை மகிழ்ச்சியுடன் ஆட்கொண்டு உய்வித்தருளும் மந்த்ரங்களே உருவான வித்யானந்த மூர்த்தி. 

864.   குஸுமப்ரீதா 

மந்த்ர மாத்ருகைகளின் சின்ன பூதமாக அமைந்த சிறந்த தெய்வீகமான புஷ்பங்களால் தன்னை அலங்கரித்தும் அர்ச்சித்தும் தன்னை சரணமடையும் தன் பக்தனின் ப்ரேமைக்கு வஸப்படும் ஆனந்தக் கடல்.

865.   குலபூ:

சிறந்த குல சாதகர்களின் குலத்தில் பெண்ணாக அவதரித்து அந்தக் குலத்தையே புனிதப்படுத்தி தெய்வீகமாக ஆக்கி அருளும் கருணாமூர்த்தி. 

866.   குல ஸுந்தரீ

குல ஸாதகர்களின் குடும்பங்களில் பரம்பரையாக "குலதெய்வம்" என்று வாலாயமாக வழிபடப்பட்டு வரும் தேவதை  ஸ்வரூபத்தில் தன் பக்தனின் வழிப்பாட்டு க்ரமங்களில் தன் ஸக்தியுடன் தானே   ஸாந்நித்யம் கொண்டு அவனுடைய இஷ்ட தேவதையாகிய தானே குலதேவதை ரூபத்தில் கோரிய வரங்களை அளித்து அவன் உய்யுமாறு  அநுக்ரஹிக்கும்  பரதேவதை.

867.   குமுத்வதீ

ஸாத்ய வித்யோபாசன பத்ததிக்கே ஆசார்யோத்தமமான  சந்த்ரனுக்கு இஷ்டமான ஆம்பல் புஷ்பத்தில் எப்பொழுதும் உறைந்து கொண்டு நக்தஞ்சரனான  அவனுக்கு மானஸோல்லாஸத்தை மழை என பொழிந்து அருளும் புஷ்பவல்லி தேவி. 

868.   குமுதினீ

ஆம்பல் கொடி எப்படி தடாகத்தின்  அடியில் மண்ணில் உதித்து ஜலத்தின் வழியாக மேலே ஏறி  சந்த்ரோதயத்தால் விகாஸம்  அடைகிறதோ அதேபோல், யோகியி னுடைய மூலாதாரத்திலிருந்து  எழும்பி அவனுடைய எல்லா சக்ர தளங்களிநூடே மேலே சென்று ப்ரஹ்மரந்த்ர கமலத்தின் மத்தியில் நின்று, அருகே உதயமாகி இருக்கும் சந்த்ரன் பொழியும் அம்ருத தாரையில் மூழ்கி, குரு  ஸ்வரூபிணீயாக அங்கே வீற்றிருக்கும்  தன்னுடைய தரிசனத்தாலும் கடாக்ஷத் தாலும் களிப்படையும் அவனுக்கு ஆனந்தவர்ஷம் அளித்தருளும் பராஸக்திமூர்த்தி.    

869.   குஸலா

தானே க்ரியா ஸக்தி ஸ்வரூபிணீ  ஆவதால் தன் பக்தன் எல்லா வகை கர்மாக்களையும் சிறப்புற நிர்வஹிக்க தேவைப்படும் எல்லா பொருள்களும் எல்லா வசதிகளும் அமைத்துக் கொடுத்து அவன் மனதில் கவலைகள் இல்லாமலும் சந்தோஷமாகவும் செயல்பட்டு லோகோபகாரமான காரியங்களை   பயனுள்ளவைகளாக நிகழ்த்தி ஜன ஸமூஹத்துக்கு சேவைகள் பல புரிந்து மகிழ்ச்சியுடன் வாழ அருள்பாலிக்கும் கல்யாண மூர்த்தி.

 870.   குலடாலயா

குல ஸாதகர்களின் குழாங்களில் அங்கும் இங்குமாக ஊடாடி அவர்களுடைய ஆராதன க்ரமங்களை ஏற்று மகிழும் சௌலப்ய மூர்த்தி.

871.   குலடாலய மத்யஸ்தா 

குல சாதகர்களின் குழாங்கள் பல வட்டம் போல் தன்னை புடை  சூழ தான் அவர்களுக்கு நடுவே இருந்துகொண்டு எல்லோருடனும் கூடிக்குலாவி, அளவளாவி ஸல்லபித்தும் அவர்களுடைய ஆராதன க்ரமங்களை அன்புடன் ஏற்று அவர்களுடன் இன்பமாக கலந்து பழகியும் மகிழ்ந்து அவர்களை ஆட்கொண்டு அருளும் ஆனந்தமூர்த்தி. 

872.   குலடாஸங்க தோஷிதா 

குல ஸாதகர்களின் குழங்களில் உள்ள உபாஸகர்களுடன் ஸரிஸமானமாக தானும் அவர்களுடைய குழுக்களில் ஒருத்தி போல் ஸரஸ ஸல்லாபமாகப் பழகுவதில் பெரிதும் மகிழ்ச்சி கொள்பவள். 

873.   குலடாபவனோத்யுக்தா 

மிக்க ஆர்வத்துடன் தன்னுடைய ஆராதன க்ரமங்களை நிகழ்த்தி தன்னிடம் அனன்யமாகச்  சரணமடையும் தன் பக்தர்களான குல ஸாதகர்களின்   க்ருஹங்களிலேயே  நித்திய வாஸம் செய்வதில் பெரிதும் மகிழ்ச்சி கொள்பவள்.  

874.   குஸாவர்த்தா 

கங்கோத்பத்தி புண்ய தீர்த்தமே தன் வ்யக்தி யாகக் கொண்டு அங்கு ஸ்நானம் செய்து பய பக்தியுடன் தன்னை அந்த தீர்த்தத்தில் ஆவாஹனம் செய்து ஆராதிக்கும் தன் பக்தனை புனிதமாக்கி ஆட்கொண்டு அருளும் ஜகன்மாதா. 

875.   குலார்ணவா

பெரிய சமுத்திரம் போல குல ஸாதகர்களின் குழாங்கள் எப்பொழுதும் தன்னை புடை சூழ்ந்து  இருப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்பவள்.

876.   குலார்ணவசாரரதா

இந்த பரந்த உலகத்தில் குல சாதகர்களான தன் வித்யோபாஸகர்களின் குழாங்கள் பெரும் ஸமுத்திரம் போல் பெருகி, உபாஸன ஸாதனைகளின் எழுச்சியால் ஒரு பெரும் ஆனந்த ஸாகரம் போல் பொங்கி எழுந்து பெரும் செல்வாக்கு கொண்டு ப்ரகாசிப்பதை கண்டு சந்தோஷத்தின் பூரிப்பானது மனதில் பொங்கி வழிய அவர்களுடைய ஸாதனக்ரமங்களின் ரீதியே தன் மனதில் மிக சிறப்பானதாக மலர்ந்து அவர்களுடைய ஆசரணையின் பத்ததியே மஹோந்நதமான தாகக்  கொண்டு பெரு மகிழ்ச்சி கொள்பவள்.    

877.   குண்டலீ 

யோகியின் மூலாதாரத்தின் கர்ணிகையில் ஸ்வயம்பு லிங்கம் த்வாரத் தோடு கூட  பின்புறமாக திரும்பி இருக்கிறது.  அங்கு மின்னல் கோடி போல் குண்டலினி ஸக்தி தேவதையானவள்  ஸர்ப்பம்  போல் மூன்றரை சுற்றாக வளைந்து கொண்டு அந்த இடத்தில் தன்னை அந்த நிலையில் த்யானம் செய்யும் தன் பக்தனை அன்புடன் அழைத்துக்கொண்டு  மேலே ப்ரஹ்ம ரந்த்ரத்துக்குச் சென்று குருவினிடம் கொண்டு சேர்க்கும் யோகேஸ்வரி.  

878.   குண்டலாக்ருதி:

ஸஹஸ்ரார கமலம் சிரஸ்ஸில்  கீழ்முகமாக நோக்கி இருக்க  அதன் நடுவே ஸக்தியுடன் கூடிய குருஸ்வரூபிணியாக  வீற்றிருக்கிறாள்  இஷ்ட தேவதை. ஆனால் மூலாதாரத்தில் குண்டலினி ஸக்தி வடிவில் மஹாஸக்தியாகிய  பராஸக்திதேவீ கீழ் நோக்கிய முகமாக வீற்றிருக்கிறாள். இந்த குண்டலீ ரூபத்திலுள்ள ஸக்தி தேவதையும் இஷ்ட தேவதையே தான்.    ஆனால் ஸஹஸ்ராரத்தில் இருப்பது குரு ஸ்வரூபம், மூலாதாரத்தில் இருப்பது ஸக்தி ரூபமாம்.


(அடுத்த பதிவில் தொடரும்)   

No comments:

Post a Comment