Thursday 5 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (22)



447.   கரப்ரியா

பத்ததியில் விதிக்கப்பட்ட முறைப்படி தன்னால் இயன்ற அளவு க்ரமமாக ஆராதனை க்ரமங்கள் நிகழ்த்தி தனக்கு அர்ப்பணித்து தன்னிடம் சரண மடையும் தன் பக்தர்களிடத்தில்அளவுகடந்த ப்ரியம் கொண்ட ஜகன்மாதா.


448.   கரரதா

உபாஸகன் ஜபம் த்யானம் முதலான முறைகளில் தன்னைக் குறித்து செய்யும் ஆந்தர பூஜைகளிலும் பாஹ்யமாக நிகழ்த்தும் த்யானாவாஹன அர்க்ய பாத்யாதி அங்கங்களுடன்  தனக்கு அர்ப்பணிக்கும் ஆராதன க்ரமங்களிலும் இன்னும் அவன் செய்யும் நித்ய நைமித்திக காமிய கர்மங்களிலும் மட்டில்லா மகிழ்ச்சி கொண்டு, அவனுடைய எல்லா ப்ரயாசைகளிலும் தன்  க்ரியா சக்தியை ப்ரஸரிக்கச்செய்து அவனை ஆட்கொண்டு அநுக்ரஹிக்கும் பெருவள்ளல்.

  449.   கரதானபராயணா

தான் அனுஷ்டிக்கும்  ஸகல கர்மங்களாலும் உண்டாகும் எல்லா விதமான பலன்களையும் அம்பிகைக்கு அர்ப்பணம் என்று த்யாகம் செய்து தன்னிடம் சரணமடையும் தன் பக்தனை ஆட்கொண்டு அவனுக்கு எளிதில் முக்தி சித்திக்க அருளி மகிழும் கருணாமூர்த்தி.

450.   கலானந்தா

எல்லாக்கலைகளிலும் ஊடாடி மகிழும் ஆனந்த மூர்த்தி.

451.   கலிகதி:

இந்த மஹாகோரமான கலியுகத்தில் பக்தர்களைப் பாத்ராபாத்ரம் பாராமல் அவர்களுடைய அனன்ய ஸரணாகதி பாவத்தை மாத்திரம் கண்டு மகிழ்ந்து அவர்களுக்கு பரகதியாகிய மோக்ஷம் அளித்து அருளும் அபார கருணைக்கடல்.

452.   கலபூஜ்யா

 நாத ஸ்வரூபிணீ ஆதலால் ஸங்கீத பரமான ஆராதன க்ரமத்தில் தன்னை பிரேமையுடன் பூஜிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு முக்தி அளிக்கும் ஆனந்த மூர்த்தி.

453.   கலப்ரஸூ:

உபாசகனின் யோகாப்யாஸ காலத்தில் அவனுடைய மூலாதாரதி ஆதார சக்ரங்களின் வாயிலாக குண்டலினி எழும்பி வருங்கால் மூலா தாரத்திலிருந்து உற்பத்தியாகும் பரா வாக்கானது நாபி, ஹ்ருதயம், கண்டம் ஆகிய பத்மங்களினூடே பஸ்யந்தீ மத்யமா ஆகிய நிலைகளைத் தாண்டி முக குஹரத்தில் வைகரீ வாக்காகப் பரிமணித்து கண்டரவானந்தமானது ஸ்ரோத்ராநந்தமாகி லோகானந்தமாக மாறி இங்கனமாக ஸாதகனுடைய நாதாநு ஸந்தானமூலம் ஸகுணப்ரஹ்ம உபாஸநம் பலவிதமாக, பக்தன் அதன் மூலம் பரமானந்தம் அடைந்து உய்ய  அருள் பாலிக்கும் பரம காருண்யமூர்த்தி.

  454.   கலநாதநிநாதஸ்டா

இனிய நாதங்களின் ஒலி ஓட்டத்தில் உறைபவள்.

455.   கலநாதவரப்ரதா

இன்னிசையே முற்றிலும் விரவிய ஆராதன க்ரமங்களில் தன்னை வழிபடும் தன் பக்தர்களை கோரிய வரங்களை வரையாது வழங்கியருளும் பெருவள்ளல்.

456.   கலநாதஸமாசாஸ்தா

ஸங்கீத கலா விற்பன்னர்களின் குழாங்களில் ஊடாடி மகிழ்பவள்.

457.   கஹோலா

வசந்தோத்ஸவ காலத்தில் பலவகை கேளிக்கைகள் நிறைந்த விநிகைகள் நடத்துங்கால், ஒரு யோகினியில் தன்னை ஆவாஹனம் செய்து நானாவிதமான களியாட்ட விழாக்கள் நடத்தி தன்னை மகிழ்வித்து ஆனந்தம் அடையும் தன் பக்தர்களை ஆட்கொண்டு அருள்பவள்.

458.   கஹோலதா

தன்னை உத்தேசித்து வசந்தோத்ஸவ விழா எடுக்கும் தன் பக்தனுக்கு எல்லா சௌகர்யங் களையும் ஏற்படுத்திக் கொடுத்து அவன் முயற்சிகள் எல்லாம் வெற்றியுடன் பூர்த்தி பெற அருள்பவள்.

459.   கஹோலககேஹமத்யஸ்தா

தன்னை உத்தேசித்து வசந்தோத்சவ விழா எடுக்கும் தன் பக்தனுடைய க்ருஹத்தில் அவனுடைய பந்து மித்திரர்களின் கூட்டங்களின் மத்தியிலேயே தான் அமர்ந்து அவர்களில் ஒருத்தியாக பழகி அவனுக்கு ஆனந்தம் அளிப்பவள்.

460.   கஹோலவரதாயினி

தன்னை உத்தேசித்து வசந்தோத்சவவிழா எடுக்கும் தன் பக்தன்  கோரிய வரங்களை வரையாது வழங்கும் பெருவள்ளல்.

461.   கஹோலா

தன்னை உத்தேசித்து வசந்தோத்சவவிழா எடுக்கும் தன் பக்தன் வேறு தான் வேறு  என்றில்லாமல் அந்த பக்தன் மயமாகவே தானே மாறி அவனுடைய வ்யக்தியிலேயே ஊடாடிமகிழ்பவள்.

462.   கவிதாதாரா 

சிறந்த கவிதை புனையும் கலைக்கு ஆதாரமான அலங்கார சக்தியானவள்.

463.   கஹோலருஷிமானிதா

உத்தால ருஷியின் சிஷ்யாரும் அஷ்டாவக்ரரின் தகப்பனாருமான கஹோலர் என்ற ருஷியினால் வெகு சிறப்பாக ஆராதிக்கப்பட்டவள்.

464.   கஹோலமானஸாராத்யா

உத்தம உபாஸகரான கஹோல ருஷியால் வெகு சிறப்பாக  பாஹ்ய பூஜா க்ரமங்களாலும்  ஆந்தர பூஜா க்ரமங்களாலும் ஆராதிக்கப் பட்டவள்.

465.   கஹோலவாக்யகாரிணீ

உபாஸக ரத்னமாகிய கஹோல ருஷி ப்ரேம பக்தியாகவும் அனன்ய சரணாகதி பாவத்துடனும் தன்னை  வெகு சிறப்பாக ஆராதித்து தன்மயமாக ஆனந்தம் அடைவதைக்கண்டு மகிழ்ந்து, அவர் கோரியபடியும் அவர் சொன்ன படிஎல்லாம் தானே நடந்து அவருக்கு மகிழ்ச்சி அளித்தவள்.

466.   கர்த்ருரூபா

சக்தியின் வடிவில் ஆவிர்பவித்து தன் பக்தனின் தத்துவ விமர்ச தசையில் அவன் புத்தியில் நிஸ்ஸம்சயமான ஆத்மஞானம் ஸ்புரித்து ஸ்திறமாக ஊன்றச்செய்து அவனுக்கு ஜ்ஞாநானந்தமும் முக்தியும் அருளி மகிழ்பவள்.

467.   கர்த்ருமயீ

பத்ராத்மாஜன் என்ற கத்தியின் வடிவமே தன் வ்யக்த ஸ்வரூபமாகக் கொண்டு தன்னை அதனில் ஆவாஹனம் செய்து விஸ்தாரமான கட்க பூஜை செய்து தன்னிடம் சரணமடையும் தன் பக்தனை ஆட்கொண்டு முக்தி அருளும் அவ்யாஜ கருணாமூர்த்தி.

468.   கர்த்ருமாதா

ஜ்ஞான சக்தியின் வ்யக்த மூர்த்தியாகவும் தன்னுடைய அபர ஸ்வரூபமாகவும் உள்ள கத்தியே வேதமாதாவாக,  அதாவது இந்த ஸ்போட ப்ரபஞ்சத்தின் தாயாகிய அறிவுச் சுடரொளியாக ஆவிர்பவித்து, ஜீவலோகத்தைக் காத்து அருளும் ரக்ஷண சக்தியாகிய ஜகன்மாதா என்ற உண்மையை உள்ளபடி உணரும் தன் பக்தனுக்கு  ஸத்யோமுக்தி அளித்தருளும் அபார கருணைக்கடல்.

469.   கர்த்தரீ

தன் நிகரற்ற ஆற்றலும் வேகமும் படைத்த சக்தியின் வடிவத்தில் ஞானசக்தியின் வ்யக்த ஸ்பூர்த்தியாக தான் ஆவிர்பவித்து உண்மையை உணர்ந்து பத்ராத்மஜனுக்கு மஹோத்சவ விழா எடுத்து விஸ்தாரமான கட்க பூஜாதிகள் நிகழ்த்தி மகிழும் தன் பக்தர்களை ஆட்கொண்டு அவனுக்கு ஜ்ஞானமும் ஆனந்தமும் முக்தியும் அளித்தருளும் பரம க்ருபாநிதி.



(அடுத்த பதிவில் தொடரும்)

No comments:

Post a Comment