Friday 6 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (23)


470.   கனீனா

ஆதி காலத்தில் பல்லாயிரக்  கணக்கான கல்பங்களுக்கு முன் திருக் கைலாயத்தில்  முப்பத்து  முக்கோடி  தேவர்கள்   புடை சூழ   ஸ்ரீ மஹாகாளரால்  ஆராதித்து, துதித்து அழைக்கப் பட்டபோது  யாவரும் பிரமிக்கத் தக்க வகையில்  ஆச்சர்யமாக, அசாதாரணமான அழகு லாவண்யத்துடன்  எல்லோரையும்  மோஹிக்கவைக்கும் ஜ்யோதிஸ் பரக்க வீச  திடீர்  என்று  ஓர்  அதிசய  பேரழகியாக ஆவிர்பவித்து அருளியவள்.

 471.   கனகாராத்யா

தானே ஸர்வஸக்திமயீ,  ஸர்வஞானமயீ, ஸர்வவ்யாபினீ  ஆதலாலும் பூமியில் உள்ள  எல்லா உலகப் பொருள்களிலும் மிக அதிகமான பொலிவுடன் பிரகாசிக்கும் ஸ்வர்ணம் உலகோரால் மிக  மதிப்பாக போற்றப்படுவது போல்  முப்பத்து முக்கோடி தேவர்கள் யாவராலும் வணங்கித் துதித்துப் பூஜிக்கப்படத்தக்க சிறப்பு வாய்ந்த  ஆத்யா பராசக்தி ஆனதாலும், எல்லா உலகங்களிலும் உள்ள எல்லா தேவதைகளாலும் தேவாஸூர ருஷி  மனிதர்களாலும் ஆராதிக்கப்படும் பரதேவதை.

472.   கனீனகமயீ 

தன் பக்தர்கள் ப்ரேமையுடன் தன்னை த்யானம் செய்யுங்கால் அவர்கள் அந்த ஆழ்ந்த சிந்தனையில்  தன்மையமாகிச் சொக்கி லயித்து விடுவதைக் கண்டு களித்து அவர்களுக்கு மேலும் மேலும் தன் மீதுள்ள விருப்பமும்  ஆர்வமும்  எப்போதும் தன் ஸந்னிதியிலேயே  தொடர்ச்சியாக இருக்க விழையும் பற்றும் பெருகச் செய்து தானும் அவர்களுடைய குழாங்களிலேயே இடையறாது சுழன்று மகிழ்பவள்.

473.   கனீனானந்தநிலயா

எப்படிப்பட்டவரையும் மோஹிக்கச் செய்யும் வசீகரண லாவண்யத்துக்கு இருப்பிடமான  புவன ஸுந்தரியாகவும்  மகிழ்சி பிழம்பாகவும் இருக்கும் தன்னுடைய அஸாமான்ய ஸுந்தர வடிவத்தைத் தன் பக்தர்கள் ப்ரேமையுடன் த்யானிக்குங்கால் அவர்கள் மனதில் ஆனந்தம் பொங்கி வழியச் செய்து மகிழும் ஆனந்த மூர்த்தி.

474.   கனகானந்ததோஷிதா 

ஜ்ஞானாக்னியின் ஒஜஸ்ஸின் ஒளிப்பிழம்புகளாக ஜாஜ்வல்யமாக பிரகாசிக்கும் தேவர்களுக்கும்  தன் மூல மந்த்ரத்தின் உபாஸநத்தால் ஜ்ஞான தேஜஸ்ஸுடன் ஒளிரும் யோகிநிகளுக்கும்  ஸாக்தானந்தம் அளித்தருளி மகிழும் கருணாநிதி.

475.  கனீனகா 

தான் உண்மையில் கைவல்ய நிர்குண ப்ரஹ்மஸ்வரூபிணீ ஆயினும் தன் பக்தர்கள் மீது அளவு கடந்த கருணை கொண்ட தாய் ஆனதால் அவர்களுக்கு எப்போதும் தன் ஸந்நிதியிலேயே இருந்து கொண்டு தொடர்ச்சியாக தனக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருப்பதிலேயே  தணியாத வேட்கையான பற்றுள்ளம் ஏற்பட்டு சொல்லொணாத ப்ரேமையின் மேலீட்டாகவே ஒழுக வேண்டும் என்ற தீவிர உணர்ச்சி  அவர்கள் மனதில் வலிமையாக ஊன்றி இயங்கச் செய்து அவர்களை ஆட்கொண்டு அருள்பவள்.

476.   கரா

தன் பக்தர்கள் வித்யோபாஸன பத்ததியில் ப்ரதிபாதிக்கப்பட்ட எல்லாத் தத்துவங்களையும் தம் தம் அனுஷ்டான க்ரமங்களில் செயலாற்றத் தேவையான அளவு தன் க்ரியா சக்தியை ப்ரசரிக்கச்செய்து, அவ அவர்களுடைய நித்ய நைமித்திக காம்ய கர்மங்கள் அனைத்தும் கோரியபடி பூரண பலன் அளிக்கச் செய்து அருள்பவள்.

477.   காஷ்டா

தானே கருணையின் எல்லை ஆதலால் தன் உத்க்ருஷ்ட ஸ்த்தியை ஒருவாறு உணர்ந்து, இந்த பிரபஞ்சத்தில்  தன்னையே பரகதியாகக் கொண்டு சரணம் அடையும் தன் பக்தர்களுக்கு அபயம் அளித்து அவர்களை ஆட்கொண்டு அருளும் பராசக்திமூர்த்தி.

478.   கதார்ணவகரீ

தன் பக்தர்களின் வாக்கின் ப்ரவாஹம் சமுத்ரம் போல் பெருகி கருத்தோட்டத்தின் ஆழமும் வேகமும் பரிமளமும் உலகத்தவர்கள் ஆச்சர்யம் படும்படி வெள்ளப்பெருக்கு எடுத்தது போலும், நீர்வீழ்ச்சி போலும் தாரையாகப் பாய்ந்து  கேட்பவர்களை இன்ப ஸாகரத்தில் மூழ்கச்செய்யும் நிரதிஸயானந்த மூர்த்தி.

479.   கரீ

உலகில் ஜன்மம் எடுத்த எல்லா ஜன்மங்களுக்கும் தம் தம் உடலையும் மனஸ்ஸையும் பிரயோகித்துச் செய்யக்கூடிய க்ரியைகளைச் செய்வதற்குத் தேவையான சக்தியை வழங்கி அருள்பவள்.

480.   கரிகம்யா

ஸகலலோக நாயகரான ஸ்ரீ மஹாகாலரால் பரிவார தேவதைகள் புடை சூழ முப்பத்து முக்கோடி தேவர்களுடன் சரணம் அடைந்து விதிமுறைப்படி விஸ்தாரமாக ஆராதிக்கப்படும் ஜகன்மாதாவாகிய ஆதி பராசக்திமூர்த்தி.

481.   கரிகதி:

ஸர்வ ஜகன்நாதரான மஹாகாலருக்கே திக்கானவள். (ஸரண்ய தேவதை ஆனவள்.)

482.   கரித்வஜபபராயணா

அ காராதி ஷ காராந்தமான ஐம்பத்தோரு மாத்ருகைகளை ஆதாரமாகக் கொண்டு அமைந்த ஸகல மந்த்ரங்களிநூடே ஊடுருவிப் பாய்ந்து அவற்றின் ஒலி ஓட்டத்தை ஆற்றுவித்து  அவற்றை உபாசிக்கும் ஸாதகர்களை ஆட்கொண்டு முக்தியளிக்கும் ஆதிபராசக்தி மூர்த்தி.

483.   கரிநாதப்ரியா

ஐம்பத்தொரு மாத்ருகைகளின் அஷ்டவர்க்கங்கள் அமர்ந்திருக்கும் சக்ர மேருவில் தன்னை ஆவாஹனம் செய்து முறைப்படி ஆராதிக்கும் வித்யோபாசகர்களிடம் அளவு கடந்த மகிழ்சி கொண்டு அவனை ஆட்கொண்டருள்பவள்.

484.   கண்டா

விசுக்தி சக்ரத்தில் நாத தர்ம ரூபத்தில் அமர்ந்து சப்த ப்ரஹ்மத்தின் வ்யக்த ரூபமாக ஸாதகனின் கண்டத்திலிருந்து உத்பவித்து அவனது மந்திர உச்சாரணத்திற்கு ஒலியின் ஆற்றலை அளித்து அவன் மனஸ்ஸின் ப்ரவ்ருத்தியை நாதமயமாக்கி அருள்பவள்.

485.   கதானகப்ரதோஷிதா

தன்னுடைய ஆவிர்பாவங்களைப் பற்றியும் தன் பரிவாரங்களைப் பற்றியும்  தன் உபாஸகர்களாகிய யோகிநிகளை பற்றியும் பலவகை வரலாற்று சிறுகதைகளின் மூலம் தன்னுடைய வழிபாட்டு முறைகளை மக்கள் சமூஹங்களினிடையே பரவச் செய்யும் தன் பக்தர்களை ஆட்கொண்டு அருள்பவள்.

486.   கமனீய

தானே தன் ப்ரக்றுதியின் வித்யுத்சக்தி மூர்த்தியாக ஆவிர்பவித்து எல்லா தேவதைகளின்  ஸ்போட சக்திகளின் வ்யக்த ஸபூர்த்தியின் சமஷ்டிஸ்வரூபிணியாக இயங்குவதால், எல்லா இனத்தாராலும் தம் தம் மத்ருஸ்ஸ்வரூபிணியாக விரும்பப்படும் ஜகன்மாதா.

487.   கமனகா

மன்மதனை தண்டித்த மஹாகாலரையே தன்னுடைய அஸாமான்யசௌந்தர்யத்தால் மோகமடயச் செய்து வசப்படுத்தி முற்றிலும் தன் ஸ்வாதீனமாக்கிய  ஈடிணையற்ற பேரழகி.

488.   கமனீயவிபூஷணா

கடி ப்ரதேசத்தில் சவங்களின் கரங்களைக் கோத்த மேகலையையும் கண்டத்தில் ஐம்பத்தொரு மாத்ருகைகளை ஸூஸிக்கும் முண்டங்களாலான  மாலையையும் சிரஸ்ஸில் சந்த்ரகலையையும், இடது மேற் கரத்தில்  பத்ராத்மாஜன் என்ற கத்தியையும், இடது கீழ் கரத்தில் நரமுண்டமும் வலது மேற் கரத்தில் அபயமும், கீழ் கரத்தில் வரதமும் தரித்து, பரந்து விசிறும் கேசபாசமும், ஜாஜ்வல்யமான மூன்று கண்களும் திரட்சியான உடல் அங்கங்களும் கொண்ட இங்கனம் சப்த ப்ரஹ்ம ப்ரதிபாத்யமான மாத்ருகைகளையும், பரதத்துவங்களின் சின்னங்களையும் தனக்கு உகந்த அணிகலன்களாக அணிந்து அசிந்த்யமான அழகின் பொக்கிஷமாக பிரகாசிக்கும் நாதரூப ஸுந்தரீ.

489.   கமனீயஸமாஜஸ்தா

ஸ்ருதி, ஸ்மருதி புராண ப்ரதிபாத்யமான பரததுவங்களின் ஜ்ஞான ஸாதனத்தால் பிரகாசிக்கும் மஹாஜ்ஞானிகளும் யோகிகளும் கவிகளும் வேத வேதாங்க மஹாவித்வான்களும் குழுமி இருக்கும் குழாங்களே தனக்கு உகந்த ஸ்தலங்களாகக் கொண்டு அவர்களின் விமர்சனங்களிலும்  விநிகைகளிலும்  ஆழ்ந்து  கலந்து  இன்புறும்  ஜ்ஞாநாம்பிகை.

490.   கமனீயவ்ரதப்ரியா

வித்யோபாஸன பத்ததியில் விதிக்கப்பட்டுள்ள வ்ரதாதிகளை அநுஷ்திக்கும் உபாஸகர்களாகிய  யோகிநிகளின் ஸாதனக்ரமங்களில் பெரிதும் மகிழ்ந்து அநுக்ரஹிக்கும் ஆனந்தமூர்த்தி.

491.   கமனீயகுணாராத்யா

சௌஸீல்யம், சௌவாச்யம், சௌதர்ஸன்யம், சௌபாக்கியம், சௌமாங்கல்யம், சௌதர்யம், சௌஜன்யம், சௌகம்யம், சௌம்யம், சௌவர்சஸ்யம், சௌஷ்டவம், சௌஹார்த்தம், சௌஹித்யம் முதலிய ரம்யா குணங்கள் ஏராளமாக  மலிந்துள்ளமையினால், எல்லோராலும் ஆவலுடன் விரும்பி, கொண்டாடப்படுபவள்.

492.   கபிலா

எப்பொருளிலும் அதனதன் மையமான உட்ப்ரதேசத்தில் அக்னி சக்தியாக ஸாந்நிதயம் கொண்டு அதனதன் இயல்பான இயக்கத்தை ஆற்றுவித்து அருள்பவள்.

493.   கபிலேஸ்வரீ

எந்த ஒரு மந்த்ரத்திலும் அதனதன் இயல்பான அக்னி சக்தியாக அமர்ந்து அதற்குப் பூர்ண வீர்யம் அளித்தருல்பவள்.



(அடுத்த பதிவில் தொடரும்.) 

No comments:

Post a Comment