Wednesday 18 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (30)



627.   காலாஞ்ஜனஸமாகாரா

மைபோல் கரிய உடல் சாயல் கொண்டவள்.  அதாவது எவ்வளவு அபாரமான புத்தி கூர்மை உள்ளவனாக இருந்தபோதிலும் யாவராலும் எளிதில் அறிந்து கொள்ள  முடியாதபடி ஒரு பெரும் புதிர் போன்ற ஸ்வரூபம் உள்ளவள்.

628.   காலாஞ்ஜனநிவாஸினீ

தனது இயல்பான நிறம் கொண்ட கரிய மையினில் உறைபவள்.

629.   காலருத்தி:

மந்த அதிகாரிகளான  சாதாரண உபாசகர்களுக்குக் கூட மஹத்தான நிர்குண ப்ரஹ்ம தத்துவம் எளிதில்  தெற்றென தெளிவாக ஸ்புரிக்க  அருளும் கருணாமூர்த்தி.

630.   காலவ்ருத்தி: 

ஸத்பாத்திரமான ஒரு சிஷ்யனுக்கு உபதேசிக்கப் பட்ட வித்யாராஜ்ஞியின் வீர்யத்தால் முடிவற்ற பரம்பரையாக பரவி வளர்ந்து ஆயிரக்கணக்கான  தலைமுறையாக நீடித்து நீண்ட காலம் செயல்பட்டு மஹா மங்களகரமான பலன்களைப் பொழிந்து கொண்டு பெருகிக்கொண்டே போகும் வித்யா ஸம்ப்ரதாய  குரு ஸ்வரூபிணீ.

631.   காராக்ருஹவிமோசினீ

என்றும் முடிவடையாமல் சுழன்று கொண்டே போய்கொண்டிருக்கும் ஜனன மரண சங்கிலித் தொடரில் சிக்குண்டு கோரமான சிறைச்சாலையில் அகப்பட்டவன் போல் விடுதலை பெற வழி தெரியாமல் சொல்லொணாத வேதனை கொண்டு அவதிப்படும் ஜீவனைத் தன் கருணா நோக்கினால்  விடுவித்து அருளும் காருண்யமூர்த்தி.

632.   காதிவித்யா

தன்னுடைய மூலமத்ரமாகிய  வித்யராஜ்ஞியின் ஆதியில்  க கார மாத்ருகை அமர்ந்ததால் காதி வித்யை என்று போற்றப்படும் அந்த மந்த்ரத்தின் உபாஸனக் க்ரமமே தன் வ்யக்த ஸ்வரூபமாகக் கொண்டவள்.

633.   காதிமாதா

எல்லா அண்டங்களிலும் விரவியுள்ள சேதனா  சேதனமான எல்லா பொருள்களையும் ஜீவராசிகளையும் படைத்தருளிய ஜகன்மாதா தானே ஆவதால் அவ்வெல்லா உயிர்களும் வாழ்வினைப்பயனாக  துன்பமே மேலிட்ட ஜன்மங்கள் எடுத்து வருந்தி வருவதைக் கண்ணுற்று இறக்கம் கொண்டு அவர்களை கை தூக்கி உயர்வித்தருளும்  நோக்கத்துடன் அவர்கள் எளிதில் உபாசித்து சீக்கிரமே விடுதலை பெற ஹேதுவாக வித்யாராஜ்ஞி  என்று பெயர் கொண்ட உத்தமமான தொரு மந்த்ரத்தை சமைத்து அவர்கள் அதன் மூலம் தன்னை உபாசித்து நற்கதி பெற அநுக்ரஹிக்கும் பரம கருணாமூர்த்தி.

634.   காதிஸ்தா

கைலாசமே தனது மூலஸ்தான இருப்பிடமாகக் கொண்டு பொதுவாகத் தான் படைத்த எல்லா அண்டங்களிலும் உள்ள எல்லா லோகங்களிலும் உறைந்து கொண்டே  அதே நேரத்தில் குறிப்பாக தன் பக்தனின் ஹ்ருதய கமலங்களிலும் மகிழ்ச்சியுடன் விஜயம் செய்துகொண்டே இருப்பவளாயினும் தன் பக்தர்கள் உத்சாஹத்துடன் தன்னை உபாசிக்கும் க்ரமத்தில் ப்ரேமையுடன் தன்மய பாவத்துடனும் ஜபிக்கும் தன் மூலமந்த்ரமாகிய வித்யாராஜ்ஞி யின் ஒலி ஓட்டத்தில் வீர்யமான ஸாந்நித்யம் கொண்டு அவர்களை ஆட்கொண்டருளும் சர்வ வ்யாபினீ.

635.   காதிஸுந்தரீ

இந்தப் பரந்த ப்ரபஞ்சத்துக்கு தானே ஜகன்மாதா ஆவதால், தன பக்தர்களுக்கு தன் ஆதரவை தன் கம்பீரமான குரலால் " உங்களுக்கு என்ன வேண்டும். சொல்லுங்கள் அப்படியே தருகிறேன்" என்று அவர்களைத் தேற்றிக்கொண்டே அருளிக்கொண்டு அவர்கள் தன மூலமந்த்ரத்தை ப்ரேமையுடன்  ஜபிப்பதைக்  கண்டு  களிப்புடன் அவர்களைக்  கைதூக்கி அன்புடன் ஆட்கொண்டருளும் தனிப் பாங்கினால் த்ரீலோக  ஸுந்தரியாக   ஜ்வலிக்கும் அன்பு நாயகீ.  

636.   காஸீ  

பூலோக  கைலாஸமாகிய காஸீ க்ஷேத்த்ரமே  பூமியாகிய சக்ரத்தின் பிந்து ஸ்தானமாக விளங்குவது போல், யோகியர்களான தன் பக்தர்களின் உடலாகிய சக்ரத்தின் பிந்து ஸ்தானமாகிய ப்ரஹ்மரந்த்ர ஸ்தானமே தன் மூலஸ்தானமாகக் கொண்டு  அவர்களை ஆட்கொண்டு அருளும் ஜ்யோதிஸ்வரூபிணீ.

637.   காஞ்சீ

தானே க்ரியா ஸக்தி ஸ்வரூபிணீ ஆவதால் ஸவங்களின் கரங்களை கோத்து புனைந்த மேகலையை இடுப்பில் தரித்தல் மூலம் ஸாதகன் நிஷ்காம்ய கர்மாவைச் செய்து ஜ்ஞானம் அடைந்து ஸக்தி - ஸிவ தத்துவத்தின் கௌரவத்தையும் உட்கருத்தையும் ஆழ்ந்து உணர்ந்து சிறந்த யோகியாகிய தன்மய பாவம் எய்தி நித்ய ஸுகம் அருள்பவள்.
இந்த பூமி லோகத்திற்கே நாபி ஸ்தானமாக விளங்கும் காஞ்சி ஷேத்ரத்தில் தான் விசேஷ ஸாந்நித்தியம் கொள்வது மட்டும் அல்லாமல் அந்த தெய்வீக ஸ்தலமே தன் வ்யக்த மூர்த்திகளில் ஒன்றாகக் கொண்டு அங்கு உறைபவர்களையும் அங்கு ப்ரதிஷ்டையாகியுள்ள தேவதா மூர்த்திகளை தரிசிக்க வரும் பக்தர்களையும் ஆட்கொண்டு அருள்பவள்.  மேலும் காஞ்ஜி ஷேத்ரமே காமபீடம், அதாவது அ காராதி ஷ காராந்தமான ஐம்பத்தொரு மாத்ருகைகள் பர்திஷ்டை யாகியுள்ள " மணி பீட ஸ்தலம்" ஆதலால் அந்த ஸ்தலமே மந்த்ராக்ஷர ஸ்வரூபிணீயாகிய தன்னுடைய வ்யக்தி மூர்த்தியாம் என்பதும், அதனால் அந்த ஸ்தலமே தன்னுடைய மூலஸ்தானமாகிய கைலாசமே ஆகும் என்பதுமான உண்மைகளை உள்ளவாறு உணர்ந்த தன் பக்தர்களுக்கு ஆத்ம ஜ்ஞானமும்  ஆனந்தமும் முக்தியும் அளித்தருளும் காருண்ய மூர்த்தி.  

638.   காஞ்சீஸா

அகத்தியர், துர்வாசர் முதலிய ஆதி காலத்திய உத்தம ஸாக்தர்களால் பெரிதும் போஷித்து வளர்த்துப் போற்றப்பட்டதும் ஐம்பத்தொரு சக்தி பீடங்களில் ஒன்றாகவும், சப்த மோக்ஷ புரிகளில் ஒன்றாகவும், மாத்ருகா மணிபீட ஸ்தலமாகவும் பல சிறப்புகள் கொண்டு விளங்குவதுமான ஸ்ரேஷ்ட நகரமாகிய  காஞ்ஜீபுரத்தின்  அதிஷ்டான தேவதா மூர்த்தியாக விளங்கிக் கொண்டு அங்கு வரும் பக்தர்களை அநுக்ரஹிக்கும் ஆனந்தமூர்த்தி.

639.   காஸீஸவரதாயினீ

ரஸங்கள் அனைத்தும் அற்றுப் போய் ஜ்ஞான ஒளியே ஜாஜ்வல்யமாக ப்ராகாசிக்கும் ஸஹஸ்ரார ஸ்தானத்தில் அ காராதி   ஷ  காராந்தமான ஐம்பத்தொரு மாத்ருகைகளால் உருவாகும் ஸகல மந்த்ரங்களையும் உபாசித்து ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் அடையும் ஸ்ரேஷ்டமான மோக்ஷ மார்க்கமாகிய மந்திர யோகத்தின் நாயகராக  விளங்கும் ஸ்ரீ மஹாகாலருக்கு, அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் சாக்தமாகவும், வெற்றிகரமாகவும், ஆனந்தமாகவும் திகழ அநுக்ரஹிக்கும் மஹா வரதமூர்த்தி.  மேலும் இந்த தத்துவத்தின் வ்யக்தி ஸ்தலமாகவும் மோக்ஷ பிச்சை இடும் வ்யாஜமாக ப்ரஹ்மானந்தத்தை வாரி வழங்கும் அன்னபூர்ணா தேவியாக  ஆவிர்பவித்து உலகத்தாருக்கு ஸக்தி - ஸிவ  தத்துவத்தின் மஹோந்நதமான சிறப்பை பறை சாற்றும் ஸாக்தாநந்தமூர்த்தி.  மேலும் காஸி  நகரத்தின் அதி நாயகரான ஸ்ரீ காலபைரவருக்கு யோகானந்தம் வரையராது வழங்கி அருளும் கால பைரவியாக ஆவிர்பவித்து மந்த்ர ஸாதகர்களுக்கு ஹம்ஸ தத்துவத்தின் பரஞ்சோதிஸ்ஸை அளித்தருளும் பரம ஹம்ஸமூர்த்தி.  

640.   க்ரீம்பீஜா 

ரஸஜ்ஞா  என்ற சிறப்புப் பெயர் கொண்டதும் தன் பூர்ண ஸ்வரூபமாக அமைந்ததும் ஆனா "க்ரீம்" என்ற பீஜத்தில் அடங்கிய " க் - ர் - ஈ - ம் " ஆகிய நாலு மாத்ருகைகள் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் உபாஸகனுக்கு வழங்க வல்ல வைகளாதலால் அவற்றின் கூட்டமைப்பாலான  " க்ரீம்" என்ற ஒரே பீஜத்தைக் கொண்டு உருவாகும் (பிண்ட மந்திரம்) ஏகாக்ஷரி மந்த்ரத்தையோ அல்லது அந்த பீஜத்தைப் பிரதானமான அங்கமாகக் கொண்ட த்ரயக்ஷரி, பஞ்ஜாக்ஷரி, ஷடக்ஷரி, ஸப்தாக்ஷரீ, அஷ்டாக்ஷரீ,    நவாக்ஷரீ, தஸாக்ஷரீ, பஞ்ச தஸாக்ஷரீ  இவைகளில் ஏதேனும் ஒரு மந்த்ரத்தையோ அல்லது பூர்த்தி வித்தையாகிய வித்யாராஜ்ஞீ யையோ  ப்ரேம த்யானத்துடன் ஜபிக்கும் உபாஸகனுக்கு போக மோக்ஷங்களை வழங்கி அருளும் அநுக்ரஹமூர்த்தி.

641.   க்ராம்பீஜஹ்ருதையா நமஸ்ஸ்ம்ருதா

தானே ஆதி பராஸக்தி ஆதலாலும் உபாஸகனின் ஹ்ருதயமே தன் சகுண ப்ரஹ்ம ஸ்வரூபத்தின் வாஸஸ்தானம் ஆவதாலும் க்ரீம காரத்தின்  ஆறு அங்க ஸ்தானங்களில் முதலாவதான ஆம் என்ற ஸக்தி ஸ்தானமே ஹ்ருதயமாவதாலும் அந்த ஸ்தானத்தில் பரதேவதையாகிய தன்னை  "க்ராம்" காரத்துடன்  மானசிகமாக ஆவாஹனம் செய்து இதுபோலவே, முறையே ஆம், ஈம், ஊம், ஐம், ஔம், அ: ஆகிய ஷடங்களிலும் ஆராதிக்கும் உபாசகனை ஆட்கொண்டு அவனுக்கு ஆத்ம ஜ்ஞானமும் ஆனந்தமும், முக்தியும், அருளும் பெருவள்ளல்.

642.   காம்யா

தன் ஸ்வய நிலையில் தான் நிர்குண ப்ரஹ்மமே ஆயினும் தன்னை, ப்ரேம த்யானத்துடன் உபாஸிக்கும் பக்தனின்பால்  தன் நிலையை மீறி கருணை மேலிட்டு சகுண ப்ரஹ்ம நிலை எய்திஅவன் மீது அநுக்ரஹத்தை வர்ஷிப்பதால், அவன் தன் ஸாந்நித்தியத்தை விட்டு அகல இயலாமல் ஸதா தன்னையே தரிசித்துக்கொண்டு இடையறாது தனக்கு கைங்கர்யங்கள் செய்துகொண்டே இருக்க ஆசை படுவதால், அவனுடைய தாய், அன்புக்கு கட்டுப்பட்டு, ஒரு தாய் தன் குழந்தை விரும்பியதை விரும்பியவாரே செய்து கொடுப்பது போலவே  தன் ப்ரேம பக்தனை எவ்விதத்திலும் திருப்தி படுத்தி அருளும் ஜகன்மாதா.  

643.   காம்யகதி:

நித்திய கர்மாக்களுக்கும்நைமித்திக கர்மாக்களுக்கும் தானே பரகதி ஆவது போலவே ஜீவர்களின் காம்ய கர்மாக்களுக்கும் கூட தானே பரகதி யானவள் ஆதலால், ஒரு குறிப்பிட்ட பலனை விரும்பி ஒரு உபாஸகன் ஒரு காம்ய கர்மாவை செய்ய தொடங்குங்கால், அந்த பக்தன் அனன்யமயமாகச் சரணமடைந்து செய்வதால்அவர் கோரும் பலனை  அவன் விரும்பியவாரே அவனுக்கு அளித்தருளும் பரம கருணாமூர்த்தி.

644.   காம்ய ஸித்திதாத்ரீ

மோக்ஷ ஸாதானமாகிய நிவ்ருத்தம் ஸரீர சௌக்கியத்தைக் குறிக்கோளாகக் கொண்ட ப்ரவ்ருத்தம்  ஆகிய இவ் இரண்டினுள்  எந்த வகையைச் சேர்ந்தவை ஆயினும், தன் பக்தன் எந்தப் பயனைக் கோரி காம்ய கர்மாக்களை ஸங்கல்பித்து அனுஷ்டிக்கிறானோ அந்தப் பயன் அவன் விரும்பியவாரே அவனுக்கு பூரணமாக ஸித்திக்குமாறு அநுக்ரஹித்து கடைசியில் அவன் முக்தி அடைந்து நித்ய சுகம் அடையும்படி அருளும் ஔதார்யமூர்த்தி.

645.   காமபூ:

ஜீவர்களின் எல்லா  செயல்களுக்கும் ஸங்கல்பமேமூலம், " இந்தச் செயலால்  இந்தப் பயன் ஏற்படவேண்டும்" என்ற எண்ணமே ஸங்கல்பம்.  ஸங்கல்பத்தால்  அந்த க்ரியையைச் செய்ய ஊக்கம் ஏற்பட்டு அந்தக் காரியத்தின் செயல் நிறைவேறுகிறது. சங்கல்பத்தின் மூலம் இச்சையே.  இந்த இச்சை ப்ரக்ருதியின் தர்மம் ஆதலால் ஸர்வ க்ரியைகளுக்கும் காமமே ஹேதுவாம்.   ஆதலின் க்ரியா சக்தியின் வ்யக்த ஸ்வரூபிணியாகிய காளிகையே ஸர்வ காமனைகளுக்கும் உத்பத்தி ஸ்தானமாம். அதாவது ஜீவர்களை செயலில் ஆற்றுவிப்பவள்.

646.   காமாக்யா

தக்ஷ ப்ரஜாபதியின் புத்திரியாகிய ஸதிதேவி யக்ஞ ஹோமாக்னி  குண்டத்தில் தன் சரீரத்தை  ஆஹூதி வாயிலாக த்யாகம் செய்தபோது  அவள் தேஹத்தி னின்று ஐம்பத்தொரு துகள்கள் நாற்புறங்களிலும் சிதறிப்போய் விழுந்ததில் "காமரூபம்" என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட ப்ராந்தியத்தின் நடுவே, பிரஹ்மபுத்ர நதிக்கரையில் ஒரு பெரிய மலை ரூபத்தில் உள்ள  "காமாக்யா "  என்ற பெரும் பர்வத வனாந்தரப் ப்ரதேசத்தின் உச்சியில் அவளுடைய யோனி பாகம் வந்து விழுந்ததாகக் காலிகா புராணம் கூறுகிறது.   அந்த புண்ய க்ஷேத்தரத்தின் அதிஷ்டான தேவதை சாக்ஷாத்  காளிகையே.  அந்த பர்வத பாகத்தை ஸ்பர்ஸித்த மாத்திரத்திலேயே பக்தன் தானாகவே காலீமயமாக மாறி ஆனந்தம் பொங்கி வழிந்து ஜீவன் முக்தனாகி ப்ரம்ஹஸ்வரூபியாகிவிடுவான்.

647.   காமரூபா

க  கார  மாத்ருகையே  தன் ஸ்வரூபமாகக் கொண்டவள்.

648.   காமசாபவிமோசினீ

தன் பக்தனை மன்மத பாணங்கள்  தாக்குதல்களினின்று விடுவிப்பவள். அதாவது தன் பக்தன்   க்ருஹஸ்தனாக இருந்துகொண்டே தன்னை உபாசிப்பத்தின்  மூலம்  நீண்ட காலம் இப்பூவுலகில் பூரண  த்ருப்தியுடனும்  மன அமைதியுடனும்  வாழ்ந்து சகல போக சௌக்கியங்களையும் அநுபவித்து, கடைசியில் ஜ்ஞான வைராக்கியங்கள் ஸித்தித்து   கைவல்ய முக்தி எய்த  அருளும்  கருணைக்  கடல்.

649.   காமதேவகலாராமா

காமகலா என்ற சிறப்புப் பெயர் கொண்ட க்லீம் காரமாகிய ஒரே பீஜத்தை மட்டும் கொண்ட பிண்ட மந்த்ரத்தை  ப்ரேம த்யானத்துடன்  ஜபித்து தன்னை உபாசிக்கும் தன் பக்தனை ஆட்கொண்டு தனக்கு அவன் ப்ரேம பக்தியுடன் அர்பணிக்கும் ஆராதனா க்ரமங்களை அன்புடன் ஏற்று மகிழ்ந்து  அவனுக்கு  ஆனந்தமும்  முக்தியும் அருளும் பரம அநுக்ரஹமூர்த்தி.

650.   காமதேவீ

ஸக்தி - ஸிவ தத்துவத்தின் ப்ரத்யக்ஷ லக்ஷ்ய மூர்த்தியாகவும் உபாஸகனின்  ப்ரஹ்மரந்த்ர கமலத்தின் மத்தியிலுள்ள த்வாதஸதள கமலத்தின் கர்ணிகையில் ப்ரதிஷ்டைஆகியுள்ள சாக்ஷாத் மஹா காலருக்கே  குருவாகவும் உபாஸ்ய தேவதா மூர்த்தியாகவும் அவருடைய ஹ்ருதய கமல பீடத்தில் ஆனந்த நடனம் புரிந்துகொண்டு மகிழ்ச்சியாகப்  பிரகாசிக்கின்ற ஜ்ஞான  ஜ்யோதிஸ் ஸ்வரூபிணீ.

651.   கலாலயா

யோகியின்   ஸஹஸ்ராரத்தின்  பிந்து ஸ்தானத்தில்  அவனுடைய தன் மயமான தாரணியில் ஜீவ ப்ரஹ்ம ஐக்கிய ஸ்திதியில்  அவிச் சின்னமாக  தானும் தன் உபாசகனின் மயமாகவே மாறி  ஆனந்திக்கும் ஏகரஸ மூர்த்தி.


(அடுத்த பதிவில் தொடரும்)

No comments:

Post a Comment