Tuesday 24 December 2013

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (32)


674.   கார்ய்யா

உபாசகனால்  ஹ்ருதயத்தில்  எப்பொழுதுமே  த்யானிக்கப்படுவதால் தன் இயல்பான  முழு ஸ்வரூபத்துடனேயே அங்கேயே  நித்யவாசம் செய்பவளாகவும்,  அவன்  ஆற்றும்  ஆராதனக்ரமங்களில்  தானே ஊடுருவி  அவற்றிலேயே உறைபவளாகவும், அவன் தன் மந்த்ரத்தையே  எப்போதும் ஜபிப்பதால் அவனுடைய புத்தியிலே  இடையறாது லீலா விலாசமாக ஸாந்நித்யமாக விளங்குபவளாகவும், இங்கனமாக தன் ப்ரிய பக்தனுடைய எல்லாக் காரியங்களிலும் அவனைச்  ஸூழ்ந்தே அன்பு பொங்கி வழிய இன்பமயமாக ஊடாடுபவளான  இஷ்ட தேவதை.

 675.   காரணதா

பூர்வ கர்மங்களின் விளைவுகளை எளிதிற் கரைக்கவும்,  உபாஸனக் கர்மங்களை செம்மையாக நிகழ்த்தி  மனநிறைவும், சாந்தியும் பெறவும், ஹேதுவான மானவ  ஸரீரத்தையும்  நற்குணமும், நல்லறிவும்  நற்செய்கைகளும்  ஸாதகமான ஸூழ்நிலையும் அமைத்துக்  கொடுத்து  தன் பக்தனை  கைதூக்கி  விட்டு அருளும் அநுக்ரஹ மூர்த்தி.      

676.   கார்ய்யகாரிணீ

உபாசகனின்  புத்தி  பலஹீனமாக  இருப்பதைக்  கண்டு இரக்கம் கொண்டு அவன் உபாஸன க்ரமங்களை  செவ்வையாக நிகழ்த்தி நிறைவு பெறத்  தேவையான த்ருட புத்தியும், மனோபலமும்  அவனுக்கு அளித்து அவனுடைய கார்ய  க்ரமங்கள் சிறப்பாக நடந்தேறி அவன் கோரிய நற்பயன்கள்  கிடைக்கப்பெற்று  மனநிறைவடைந்து மகிழ அருளும் பரம கருணாமூர்த்தி.

677.   காரணாந்தரா

தன் இயல்பான தேஹ வ்யக்தியை விட்டு சில இக்கட்டான ஸமையங்களில் அந்த அந்த ஸந்தர்ப்பானநுசாரமாக  பொருத்தமானவைகளும், தேவையானவைகளும், ஆன வேறு  ஸரீர வ்யக்தி களை ஏற்று தன் பக்தர்களை காப்பாற்றுவாள்.

678.   காந்திகம்யா

நெருக்கடியான நேரங்களில்  இன்னது செய்வது என்று புரியாமல் தவிக்கும் தன் பக்தனின் இச்சாமாத்திரத்திலேயே அவன்  விரும்பிய அக்கணமே  அவன் விரும்பியவாரே  அவனுடைய அந்த ஸூழலிலேயே  தோன்றி  அவனுக்கு  தேவையான உதவிகளைச்  செய்தருளும் க்ருபாநிதி.

679.   காந்திமயீ

யாவராலும் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத அளவு ப்ரகாசிக்கும்  ஒளிப்படலமே தன் உருவாகக் கொண்டு ஜ்வலிப்பவள்.

680.   காத்யா

வெகு  காலத்துக்கு முன் கத்யர் என்ற மஹரிஷியின் குலத்தில் பெண்ணாக அவதரித்தருளியவள்.

681.   காத்யாயனீ

பல கல்பங்களுக்கு முன் கத்ய மஹரிஷியின்  கோத்திரத்தில்  துர்கையாக அவதரித்து அருளி பண்டாசுரன் முதலிய கொடிய அரக்கர்களை ஸம்ஹரித்து உலக மக்களுடைய பெரும் கஷ்டங்களைப்  போக்கி  அருளிய ஆபத்பாந்தவ மூர்த்தி.

682.   கா

தன்னுடைய அபார ஸக்தியினால் நிகழும் அதி  அற்புதமான அருட் செயல்களை கண்ணுறும் யாவரும் பிரமித்துப்போய்  ஆஹா, இவ்வளவு அறிய அதிசயங்களை நிகழ்த்தி உலக மக்களுக்கு பேருபகாரம் செய்தருளும் இந்த தேவி, உண்மையில் யார்?  ப்ரஹ்மாவின் ஸக்தியா, விஷ்ணுவின் ஸக்தியா  அல்லது  பரம ஸிவனின்  ஸக்தியா அல்லது நிர்க்குணமான  பரப்ப்ரஹ்மத்தின் ஸக்தியே  ஸகுண விராட் ஸ்வரூபிணியாக  ஆவிர்பவித்து அருளியுள்ள மஹாமாயாமூர்த்தியா?  இவள்  யாராக இருக்கக் கூடும் என்றெல்லாம்  வியந்து  மயக்கமுரும் வண்ணம் எஞ்ஞான்றும் புதுமைச்  செயல்களே நிறைந்த பராசக்தி மூர்த்தி. அதாவது எப்பொழுதுமே கேள்விக்குறியாக இருப்பவள்.    

683.   காமாஸாரா

மனிதன் உச்சரிக்கும் அக்ஷ்ரங்களில் அமர்ந்திருக்கும் எல்லா  மாத்ருகைகளுக்கும், குறிப்பாக மந்த்ரங்களின் மாத்ருகைகளுக்குத்  தேவையான வலிமையையும் வீர்யமும் அளித்து அவற்றின் பொருளானது ஒலி ஓட்டத்தினூடே வீறுடன் பாய்ந்து உலகுக்கு பயனாகச் செய்தருளும் ஜகதம்பிகை.

684.   காஸ்மீரா

காஸ்மீர தேசத்தில் கிடைக்கும் பரிமளமான  குங்குமத்தினால்  தன்னை  அர்ச்சித்து ஆராதிக்கும் அத் தேச வாசிகளான சாக்தர்களின் உபாசன க்ரமங்களில்  பெரிதும்  மகிழ்ச்சி  கொண்டருள்பவள்.

685.   காஸ்மீராசாரதத்பரா

காச்மீர தேச வாசிகளான சாக்தர்களின் உபாசன  ஆசரணைகளில்  அளவில்லா மகிழ்ச்சி கொண்டு அவர்களின் ஆராதன க்ரம  விதி முறை நிகழ்சிகளை அப்படியே ஏற்று அருளும் அநுக்ரஹமூர்த்தி.

686.   காமரூபாசாரரதா

பாரத தேசத்தின் வடகிழக்குப்  பகுதியில்  ப்ரஹ்மபுத்திரா நதி  தீரத்தில் மிக உயரமான மலைத் தொடர்களை யொட்டிய ப்ராந்தியத்தில்  பரவியுள்ள ப்ராக் ஜ்யோதிஷம் என்றும் காமரூபம் என்றும் பழங்காலத்தில் அழைக்கப்பட்டதும் அஸ்ஸாம்  என்று தற்சமயம் அழைக்கப்படும் பிரதேசத்தில் வசிக்கும்  சாக்தர்களின்  வழிப்பாட்டு முறைகளில் பெரிதும் உவகை கொண்டு அவற்றை அவர்கள் அர்ப்பணிக்கும் வண்ணம் ஏற்றருளி மகிழ்பவள்.

687.   காமரூபாப்ரியம்வதா

ஐம்பத்தொரு மாத்ருகைகளும் தானே  ஆவதால் தன முழுமையான சக்தியுடன் மாத்ருக மண்டலத்தில் பூரண ஸாந்நித்யத்துடன்  மிக்க வீறுடன் பாய்ந்து பக்தர்களுடைய கண்டத்தில் தானே ஊடுருவி  அவர்களுடைய பேச்சையும்  கானத்தையும் மிக்க மதுரமாக்கி  அருள்பவள்.

688.   காமாரூபாசாரஸித்தி:

காமரூப தேசத்தில் வாழும் பக்தர்களின் வழிப்பாட்டு முறைகளில் மிக்க மகிழ்ச்சி கொண்டு அவர்களது ஆராதன க்ரமங்களை அப்படியே ஏற்று அவர்களுக்கு பூரண சித்தி அளிப்பவள்.

689.   காமரூபாமனோமயி

தன்னை  மாத்ருகா மண்டல ஸ்வரூபிணியாக ஆராதிக்கும் உபாசகர்களின் மனஸ்ஸைப்  பண்படுத்தி  அதில் தானே தன்மயமாக நிலைத்து, அவர்களுடைய  வித்யோபாஸனத்தை ஸபலமாக்கி  அவர்களுக்கு எல்லை இல்லா ஆனந்தப் பெருக்கு அருளி மகிழ்பவள்.

690.   கார்த்திகா

ஆதி பராசக்தி மூர்த்தியாகிய  தக்ஷினகாளிகையின் வீரமும் ரௌத்ரமும் கருணையும் ஜ்ஞானமும்  ஒரு முனைப்பாக ஒருங்கே ஒன்றி பக்தர்களின் ஊழ்வினைத் தளையைத் தகர்த்தெறிவதற்காக  அவள் அருளாலே அழகிய பட்டாக்கத்தியின் உருவில்  பத்ராத்மாஜன் என்ற பெயரோடு ஆவிர் பவித்து
அருளி  அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கௌமார சக்தி
ஸ்வரூபிணியாகிய கௌமாரீ.

691.   கார்திகாராத்யா

ஆதி பராசக்தி யாகிய தன்னுடைய சர்வ சக்திகளின்  அபர ஸ்வரூபமாக தன் இடது மேற்கரத்தில் அமர்ந்து விளங்கிக்கொண்டிருக்கும் பத்ராத்மாஜன் என்ற  அழகிய  பட்டாக் கத்தியை "கட்கபூஜா" விதான க்ரமத்தில்  விதிமுறைப்படி பக்தன் ஆராதித்த  மாத்திரத்திலேயே  அவனுக்கு ப்ரஹ்ம ஞானத்தையும், ஸிரஞ்ஜீவித்வமும் பரமானந்தமும் ஜீவன் முக்தியும் அளித்தருளும் பரம கருணாமூர்த்தி.

692.   காஞ்சனாரப்ரஸூனபூ :

முன்னொரு காலத்தில்  ஒரு பக்தன் தவம் இயற்றிய  வனத்தில்  ஒரு  காட்டாத்தி மரத்தின்  பூவிலிருந்து  ஒரு பெண் குழந்தை  வடிவில் வந்து அவனை  ஆட்கொண்டருளிய  பெருவள்ளல்.

693.   காஞ்சனாரப்ரஸூனபா

கோவிதாரம்  என்றும்,  பாரிஜாதம்  என்றும் காஞ்சனாத்ரம்  என்றும் காஞ்சனாலம்  என்றும் அழைக்கப்படும் ஒருவகை  தெய்வீக  மரத்தின் மஞ்சள் நிரமாகவும், பொன் நிறமாகவும் உள்ள அழகிய  பூவைப்போல்  ப்ரகாஸமாக  ஜ்வலிப்பவள்.

694.   காஞ்சனாரப்ரபூஜிதா

காஞ்சனா மலர்கள் கொண்டு  பூஜிக்கப்படுவதில்  பெரு  மகிழ்ச்சி  கொள்பவள்.

695.   காஞ்சரூபா

அண்டங்கள் அனைத்தையும்   தன்  ப்ரகாஸத்தால்  ஒரே ஒளிமயமாக  விளங்கும்படி  ஜ்வலிக்கச் செய்யும்  அஸ்மான  காந்திமதி.

696.   காஞ்சபூமி :

இந்தப் பரந்த ப்ரபஞ்சத்தில் எங்கும் சேதனா சேதனமாய்  உள்ள எல்லாப் பொருள்களிலும்  ஜீவன்களிலும்  அமையும்  எல்லா  வகையான ப்ரகாஸத்திற்கும்  ஆதாரபீடமாகவும் இருப்பிடமாகவும் உள்ள  கேவல  ஜ்வலன ஸக்தி.

697.   காம்ஸ்யபாத்ரப்ரபோஜினீ

பக்தர்கள்  வெண்கலப் பாத்திரத்தில்  நிரப்பிக் கொடுக்கும் இனிப்பான பான  விசேஷங்களையும்  மதுரமான நைய்வேத்தியப்  பொருள்களையும் பெரு மகிழ்ச்சியுடன் விரும்பி  அருந்தி  அருளும்  சௌலப்பிய  மூர்த்தி.


(அடுத்த  பதிவில் தொடரும் )

No comments:

Post a Comment