Tuesday 19 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (10)


188.  கபாலீ

குரு மண்டலத்தின் யோக பீடமாகிய சஹஸ்ரார அதிஷ்டானமே குரு தத்துவத்தின் வேதிகையாக இயங்க அதன் மத்தியில் ஸ்வகுரு முதல் சர்ய்யானந்தநாதர் வரை உள்ள எல்லா குருமார்களின் ஸ்வரூபிணியாக தானே பிரஹ்மரந்த்ர ஸ்தானத்தில் அமர்ந்து அங்கு வந்து அனன்ய ஸரணாகதியாக தன்னை ஆஸ்ரயிக்கும் உபாசகனைக் கை தூக்கி ஆனந்த மூர்த்தியாகவும் ஜீவன் முக்தனாகவும் ஆக்கிஅருளும் அபார தயாநிதி.

189.  கரபூஷாட்யா

தானே க்ரியா சக்தி ஸ்வரூபிணி ஆதலால் தன் வித்யையை உபாசிக்கும் யோகிநிகளையும் தன்னைப்போல் குரு தத்துவ லக்ஷ்ய ஸ்வரூபிணிகளாக ஆக்கும் கருணா த்ருஷ்டியுடன் அவர்கள் தன்னை தியானிக்கும் க்ரமத்தில் கர்மேந்ரியங்களின் சின்னமாக யோகியர்களின் கரங்களை கோத்த மேகலையை தன் கடிபிரதேசத்தில் அணிந்து, அவர்கள் தன்னை அந்தக்கோலத்தில் தியானிக்க உதவும் தயாநிதி.

190.  கபாலசக்ரமண்டிதா

தன்னை ஆராதிக்கும் பக்தர்கள் தன் ஸகுண வ்யக்தியை தியானிக்கும்கால் தம் தம் பிரஹ்மரந்திர கமலத்தின் மத்தியில் தன்னை குருஸ்வரூபிணியாக  ப்ரேம பூர்ணமாக தியானித்து அனன்ய சரணமடையும் குண்டலினியோக ஸம்ப்ரதாய ப்ரகாரம் தாமும் இஷ்டதேவதையாகவே உணர்வுகொண்டு பாவனா நிஷ்டையில் தன்மயஸ்திதி எய்தி லயித்திருக்கும் பொழுது, அவர்களை அந்நிலையிலேயே ஆட்கொண்டு அவர்களுடைய ஸஹஸ்ராரத்தை அப்படியே தன் சக்ரமாகவே கொண்டு அவர்களுக்கு எல்லையற்ற நிலையான ப்ரஹ்மானந்தம் அளித்தருளி அவர்களை ஜீவன் முக்தர்களாக்கி அனுக்ரஹிக்கும் பரம கருணாமூர்த்தி.

191.  கபாலகோடிநிலையா

பிரேம பூரணமான த்யானத்தில் ஆழ்ந்த்திருக்கும் உபாசகனுடைய ஸஹஸ்ராரமே தன்னுடைய சக்கரமாக இயங்க அதனில் உள்ள ஒவ்வொரு முனைப்பான ஸ்தலத்திலும், அதாவது ஒவ்வொரு பரிவார தேவதா ஸ்தானத்திலும், அதே போல் பிந்து ஸ்தானத்திலும், அங்ஙனமே சக்கரத்தின் பூபுரத்தில் அக்ர கோடி ஸ்தானத்திலும் அதாது சக்ர பிரவேச ஸ்தலத்தில் வித்யா குருவாகிய காலபைரவி, காலபைரவர் ஸ்தானத்திலும் அந்த அந்த தேவதா ரூபமாகவே தான் ஆவிர்பவித்து, பக்தனுடைய அந்தர்யாகத்தில் வரிசை க்ரமமாக உபாஸகனால் மானசீகமாக நிகழ்தப் பெறும் எல்லா விசேஷ உபசாரங்களையும் அப்படியே தான் ஏற்று மகிழும் ஸ்வரூபிணி.

192.  கபாலதுர்க்ககாரிணீ

பக்தன் அனன்ய சரணமடைந்து இழ்ட தேவதையை பிரேம பூர்ணமாக தியானித்துக் கொண்டே தன்மயமான லயம் அடைய ப்ரயத்தனம் செய்து கொண்டிருக்கையில் அறிஷ்டவர்கங்களாகிய கொடிய ராக்ஷசர்கள் வந்து மோதி பாதகம் செய்ய வரக்கூடாதபடி தன் கட்கத்தால் சத்ருக்கள் கிட்ட நெருங்க வொண்ணாதபடி தடுத்து ஸாதகனுடைய உபாஸன பிரயாசைகளைக் காத்தருளும் ஜகன்மாதா.

193.  கபாலகிரிஸம்ஸ்தானா

ஸாதகன் சக்ர மேரு ஆராதனத்தில் பூபூரத்திலிருந்து உபாசன பத்ததிபிரகாரம் வரிவஸ்யா கிரமங்களினூடே ஒவ்வொரு தளமாகக் கடந்து கடந்து வழிபாடுகள் செய்துக்கொண்டே மேலும் மேலும் பிந்து ஸ்தாநத்தை நோக்கி முன்னேறிக்கொண்டே போய்க் கொண்டிருக்கையில்  அந்த அந்த ஸ்தானத்துக்குரிய பரிவார தேவதையாகவே  தான் ஆவிர்பவித்து அவனுடைய வழிப்பாட்டு க்ரமங்களை ஆதரித்து, அவன் நிகழ்த்தும் முறைகளை அப்படியே மனமுவந்து ஏற்று, அவனுக்கு நித்யானந்தம் அளித்து, அவனை ஜீவன் முக்தனாக்கி அருளும் கருணைக் கடல்.

194.  கபாலசக்ரவாசினீ

ஸாதகனுடைய ஸஹஸ்ரார கமலமே சக்ரமாக இயங்க அதனில் அவன் தன்னை மானசீகமாக பிரதிஷ்டை செய்து, தியான பாவனா பூர்வமாக ஆராதிக்க தானே அதனில் பூரண ஸாந்நித்யமாக அமர்ந்து அவனுடைய அந்த அந்தர்யாக ஆராதன க்ரமதத்தை அப்படியே ஏற்று மகிழ்பவள்.

195.  கபாலபாத்ரஸந்துஷ்டா

ஸகுண ப்ரஹ்மத்தின் வ்யக்தமூர்த்தி எதுவாயினும் ஏதேனும் ஒரு தேவதையை உபாசிக்கும் தகுதியானது த்ருட பக்தியாலும் அனன்ய சரணபாவத்தாலும் மட்டுமே ஏற்படும் ஆதலால் அந்த இரு பண்புகள் பூரணமாக ஸித்திக்கப்பெற்று ஓர் ஆர்வமுள்ள ஸாதகனுடைய ஊக்கமான  உபாஸன ப்ரயாசைகளை ஆதரித்து, அவனுடைய ஆராதன க்ரமங்களை அப்படியே திருப்தியாக ஏற்று மகிழ்பவள்.

196.  கபாலார்க்யபராயணா

ஸஹஸ்ரார கமலமே சக்ரமாக இயங்க அதனில் அந்த அந்த ஸ்தானத்தில் வீற்றிருக்கும் அந்த அந்த  தேவதைக்கு அர்க்கிய  பாத்யாதி உபசார வரிவஸ்யா  க்ரமத்தில் மானஸிகமாக அர்பணிக்கப்படும் பூஜா திரவியங்களை பக்தனின் அன்புக் காணிக்கையாக ஏற்று மகிழ்பவள்.

197.  கபாலார்க்யப்ரியப்ப்ராணா

ஸஹஸ்ரார கமலமே சக்ரமாக இயங்க அதனில் அமர்ந்துள்ள அந்த அந்த பரிவார தேவதைகளுக்கும் ஸமர்பிக்கப்படும் பூஜா திரவியங்களை தன் உயிருக்கு உயிராய் ஏற்று அதன் வாயிலாக பக்தனுக்கு ஆனந்தமும் ஜீவன் முக்தியும் அளித்து மகிழ்பவள்.

198. கபலார்க்யவரப்ரதா

அந்தர்யாக பத்ததியில் ஸாதகன் தன் ஸஹஸ்ரார கமலத்தையே சக்ரமாகக் கொண்டு, பூபுராதி பிந்த்வந்த க்ரமமாக பிரதிஷ்டையாகி இருக்கும் எல்லா பரிவார தேவதைகளுக்கும் ஸமர்பிக்கப்படும் எல்லா உபசாரப் பொருள்களையும் அன்பின் காணிக்கையாக ஏற்று, பக்தனுக்கு புனராவ்ருத்தி ரஹித ரூபமான ஜீவன் முக்தியும் ஆனந்தமும் அனுக்ரஹித்து மகிழும் பெரு வள்ளல்.

199.  கபாலசக்ரரூபா

ஸஹஸ்ரார கமலமே சக்ரமாக இயங்க, ஸாதகன் தன் ஸிரஸ்ஸிலேயே சக்ர மேரு பீடநாயகனாக-பீடசக்தி தேவதைகளின் ஸ்தானத்தை உணர்ந்து அவ்விடத்திலேயே ப்ரேம பக்தியுடன் அந்தர்யாக பத்ததி பிரகாரம் ஆராதன க்ரமங்களை ஸ்ரத்தையுடன் மானசீகமாக நிகழ்தத் தொடங்கும்போதே அவனுடைய ஸஹஸ்ராரத்திலேயே தான் பூரண ஸாந்நித்யம் கொண்டு அவனுடைய ஸபர்ய்யா க்ரமங்களை அப்படியே ஏற்று மகிழ்பவள்.  ஆக ஸாதகனின் ஸஹஸ்ராரமே  சக்ரம் என்றும் இந்த நாமம் வலியுறுத்துகிறது.

200.  கபாலரூபமாத்ரகா

ஸாதகனின் ஸஹஸ்ராரமே சக்ரமாக இயங்க அந்த முறையில் அந்தர்யாக பத்ததி பிரகாரம் ஆராதனை செய்வதற்கு வேறொரு புறப்பொருள் தேவைப்படாமல் அவனுடைய ஸிரஸ்ஸிலேயே தன் பூரண ஸாந்நித்யம் கொண்டு, பிரேமையுடன் அவன் நிகழ்த்தும் மானசீக ஸபர்ய்யா  க்ரமங்கள் அனைத்தையும் அப்படியே மனம் நிறைந்த த்ருப்தியுடன் ஏற்று மகிழ்பவள்.

201.  கதலீ

இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருள்களிலும் தானே வ்யாபித்- திருப்பினும், குறிப்பாக சில பொருள்களிலே விசேஷ விருப்பத்துடன் ஸாந்நித்யம் கொள்கிறாள் தேவி தக்ஷினகாளிகை.  அந்த வகையில் வாழை மரத்திலும் அதன் பல பாகங்களிலும் பெரிதும் உவப்புடன் உறைபவள்.

202.  கதலீரூபா

பக்தர்கள் தன்னை வழிபடுகையில் பசும் வாழை மரத்தில் தன்னை ஆவாஹனம் செய்து வழிப்பட்டால் மிக்க உவகையுடன் பூரித்து அவர்கள் நிகழ்த்தும் ஆராதன க்ரமத்தை அப்படியே ஏற்று மகிழ்பவள்.

203.  கதலீவனவாசினீ

வாழைத்தோட்டத்தில் உறைவதில் அதிகம் விருப்பம் கொண்டவள் ஆதலால் ஒரு தோட்டத்தையே மொத்தமாக வழிபட்டு அதனில் தன்னை ஆராதிக்கும் பக்தனை உடனே ஆட்கொண்டு அநுக்ரஹிப்பவள்.

204.  கதலீபுஷ்பஸம்ப்ரீதா

உலகத்தில் எத்தனையோ  விதம் விதமான புஷ்பங்கள் மலர்ந்து சொரிந்தாலும் ஒரு சில புஷ்பங்களில் மட்டுமே மகிழ்ச்சி கொள்கிறாள் தேவி தக்ஷினகாளிகை. அந்த வகையில் வாழைப் பூவில் அதிக விருப்பம் கொண்டவளாதலால் அர்ச்சனையிலும் மாலை அலங்காரங்களிலும் ஹோம ஆஹுதிகளிலும் நெய்வேத்தியப் பொருள்களிலும் விசேஷமாக வாழைப்பூவை சேர்த்து அர்பணித்தால் பெரிதும் மகிழ்பவள்.

205.  கதலீபலமானஸா

வாழைப்பழத்தில் அதிக விருப்பம் கொண்டவள் ஆதலால் விசேஷமாக வாழைப்பழங்களை நெய்வேத்யங்களிலும், ஹோம ஆஹுதிகளிலும் ஏராளமாக அர்பணித்தால் பெரிதும் மகிழ்பவள்.


(அடுத்த பதிவில் தொடரும்)

No comments:

Post a Comment