Monday 25 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (13)



246.  கஸ்தூரிபூஜகப்ராணா

கஸ்தூரி மானிலும் அதனின்று பெறப்படும்  சிறந்த பரிமள கந்த த்ரவ்யத்திலும் தன்னை ஆவாஹனம் செய்து ஆராதிக்கும் பக்தனுடைய வழிபாட்டு க்ரமங்களை ஆதரவுடன் ஏற்று அவற்றிற்கு தக்க பலன் அளித்து அனுக்ரஹீக்கும் கருணைக்கடல்.

247.  கஸ்தூரிபூஜகப்ரியா

கஸ்தூரி மானிலும் அதன் பாலாகிய சிறந்த கந்த த்ரவ்யத்திலும் தன்னை ஆவாஹனம் செய்து ஆராதிக்கும் பக்தனுடையவழிபாட்டுக் க்ரமங்களை அன்புடன் ஸ்வீகரித்து அவற்றிற்கு தக்க பலன் அளித்து அவன் கோரும் வரங்களை அவன் விருப்பப்படியே பிரியத்துடன் வழங்கி அருளும் கருணாமூர்த்தி.

248.  கஸ்தூரிப்ரேமஸந்துஷ்டா 

விஸ்வமங்கள ஸ்வரூபியாகிய பரமசிவனுடைய சக்தி சிவ தத்துவ மூர்த்தியாம் மஹாகாளருடைய ஹ்ருதயத்தில் நின்று நர்த்தனம் செய்யும் வாயிலாக ஸிவதத்துவத்தை வசப்படுத்தும் சக்தி தத்துவத்தின் வ்யக்த மூர்த்தியாகிய தக்ஷினகாளிகையாக இயங்கி உபாஸகர்களாகிய யோகிநிகளை அம்ருத ஆஸ்வாத ஆனந்த வெள்ளப்பெருக்கில் மூழ்கச்செய்து ஜீவன் முக்தி அருளும் கருணாமூர்த்தி.

249.  கஸ்தூரிப்ராணதாரிணீ

உண்மையில் உபாசகனும் தேவதையும் குருவும் ஒன்றே ஆதலால் பூர்வ கர்ம பலனாக ஏற்பட்டிருக்கும் இந்த ஜன்மம் வீணாகப்போகாமல் மந்த்ரோபதேசத்தின் மூலமாக பரமாத்மா வாகியதேவதையின் ஸ்வரூபத்தை சிஷ்யனுக்கு காட்டிக்கொடுத்து அவன் மனசிலிருக்கும் மாஸுகளை நீக்கி, ஜ்ஞானத்தின் தெளிவை ஏற்படுத்தி, அதன் மூலமாக இந்த ஜென்மத்திலேயே அவனுக்கு சீக்கிரமே முக்தி கிடைக்க அருளும் கருணையே வடிவான குரு ஸ்வரூபிணீ.

250.  கஸ்தூரிபூஜகானந்தா

தேவியின் யந்திரத்தில் அந்த அந்த குறிப்பிட்ட ஸ்தலங்களில் ப்ரதிஷ்டையாகி இருக்கும் தக்ஷினகாளிகை, மஹா காளர், பத்ராத்மாஜர் ஆகிய மூலஸ்தான தேவதைகளையும், தன் சஹ யோகிநி களில் ஆவாஹனம் செய்து ஸ்வகுரு, பரம, பரமேஷ்டி குருமார்களின் குருமன்டலத்தையும் ஆவாஹனம் செய்து,   விதிமுறைப்படி வழிபடும் பக்தனின் ஆராதன க்ரமங்களை அன்புடன் ஏற்று மகிழ்ந்து பூரண அநுக்ரஹம் வழங்கி அருளும் கருணாமூர்த்தி.

251.  கஸ்தூரிகந்தரூபிணீ

கஸ்தூரி எனப்படும் சிறப்பான மானின் பாலினால் தயாரிக்கப்படும் கஸ்தூரி என்ற வாசனை  த்ரவ்யத்தில் உகப்புடன் உறைந்து, அதனில் ஆவாஹனம் செய்து வழிபடும் பக்தனை அநுக்ரஹித்து மகிழும் கருணை வள்ளல்.

252.  கஸ்தூரிமாலிகாரூபா

கஸ்தூரி என்ற வாசனை  த்ரவியத்தால் தயாரிக்கப்படும் சிறு கோளங்களை அக்ஷங்களாகக் கோத்து உண்டாக்கிய ஜப மாலையில் உவகையுடன் சாந்நித்தியம் கொண்டு உறைந்து மகிழ்பவள்.

253.  கஸ்தூரிபோஜனப்ரியா

தேவியின் ஆராதனக்ரமங்களில் அங்கமாக தன் சஹ யோநிகளுக்கும் தன் ஸ்வகுரு, பரமகுரு, பரமேஷ்டிகுருமார்களுக்கும் மிஷ்ட்டான போஜ்யங்களும், ஷீர பாயஸ பல தாம்பூலாதிகளுடன் விஸ்தாரமான ஸந்தர்ப்பணம் செய்து மகிழ்விக்கும் தன் பக்தனிடத்தில் அளவு கடந்த ப்ரீதி கொண்டு அவனுக்கு ப்ரஹம ஜ்ஞானமும் ஜீவன் முக்தியும் அநுக்ரஹிக்கும் பெருவள்ளல்.

254.  கஸ்தூரிதிலகானந்தா

மனத்திலும் புத்தியிலும் தொடர்ச்சியாக நிகழக்கூடிய வேலை க்ரமங்களாகிய த்யானம், பாவனை, தாரணை, முதலிய தீவிரமான செயல்பாடுகளை ஒழுங்கு படுத்தி உபாஸகனைச் சீரிய மார்க்கத்தில் செல்ல வழிப்படுத்தி, அவன் சீக்கிரமே ப்ரஹ்மஞானமும் ஜீவன் முக்தியும் அநுக்ரஹிக்கும் பெருவள்ளல்.

255.  கஸ்தூரிதிலகப்ரியா

அளவு கடந்த ப்ரேமையின் மேலீட்டால் அனன்ய ஸரணாகதி பாவத்துடன் தன்னை தீவிரமாக உபாசிக்கும் பக்தனிடத்தில் அதிப்ரீதி கொண்டு அவனுக்கு ஆனந்தத்தை வாரி வழங்கும் பெரு வள்ளல்.

256.  கஸ்தூரிஹோமஸந்துஷ்டா

தீவிரமான உபாஸகர்கள் மூலமந்திர ஸம்புடிதமாகத் தன்னை குறித்துச் செய்யும் ஹோமங்களில் பெரிதும் மகிழ்சி கொள்பவள்.

257.  கஸ்தூரிதர்பணோத்யதா

ஸ்ம்ருதிகளில் விதிக்கப்பட்ட ப்ரஹ்ம யஜ்ஞம், ஸ்ராத்தாங்க தர்ப்பணம், தர்ஸம், பார்வணம், யக்ஷ்ம தர்ப்பணம், யம தர்ப்பணம், பீஷ்ம தர்ப்பணம் முதலான நித்ய நைமித்திக வைதிக கர்மாக் களான தர்பணங்களும், மூல மந்திர தர்ப்பணம், ஆத்மார்ப்பணாஹூதி தர்ப்பணம், பிந்து தர்ப்பணம் முதலான உபாஸனக்ரமாங்க தர்பணங்களும் விதி முறைப்படி நிகழ்த்தி தனக்கு அற்பணிக்கும் தன் பக்தநிடத்தில் அளவு கடந்த ப்ரீதி கொண்டு அவனை மனமாற அநுக்ரஹித்து மகிழும் ஜகன்மாதா.

258.  கஸ்தூரிமார்ஜ்ஜனோத்யுக்தா

மானிடப் பிறவியினூடே  ஒவ்வொருவனுக்கும் விளைந்துள்ளவையான ஆத்யாத்மிகம், ஆதிபௌதீகம், ஆதிதைவீகமான தீங்குகள் தன் பக்தனை கெடுக்கா வண்ணம் அவற்றை அறவே ஒழித்து அவனை தூய்மை படுத்தி அவன் செய்யும் உபாஸன, ஆராதன க்ரமங்கள் உத்தேசித்தப்படி சீறிய முறையில் இயங்கி சீக்கிரமே கோரிய பயனடைய அநுக்ரஹிக்கும் அருட்பெருங் கடல்.

259.  கஸ்தூரி சக்ரபூஜிதா

தேவியின் சக்ரத்தில் ஆங்காங்கு பல்வேறு ஸ்தலங்களில் பிரதிஷ்டை ஆகயிருக்கும்  பரிவார தேவதைகளை விதிமுறைப்படி ஆராதித்துக்கொண்டே பிந்து ஸ்தானத்தை நோக்கி முன்னேறி வருங்கால் அந்த அந்த ஒவ்வொரு தேவதையையும் சாக்ஷாத் காளிகையையே நேரிட ஆராதிக்கும் பாவத்தில் எல்லா பூஜைகளையும் பூரண பிரேம பக்தியுடன் நிகழ்த்தி மன நிறைவு கொள்ளும் பக்தனிடத்தில் பூரண திருப்தி கொண்டு அவனது வழிபாட்டு க்ரமங்களை மகிழ்ச்சியுடன் ஏற்று அருளும் நித்யானந்த மூர்த்தி.

260.  கஸ்தூரிபுஷ்பஸம்பூஜ்யா

பரிவார தேவதைகளின் பூஜைகளை த்ருட பக்தியுடன் பத்ததி பிரகாரம் நீகழ்த்திவரும் க்ரமங்களில் வித்யாராஜ்ஞியின் பீஜங்களையும் மாத்ருகைகளையும் அந்த அந்த தேவதைக்கும் அந்த அந்த ஸந்தர்ப்பத்திற்கும் பொருத்தமான ரீதியில் அநுஸந்தித்து  ப்ரயோகிக்கும் தன் பக்தனிடத்தில் அளவு கடந்த மகிழ்சி கொண்டு அநுக்ரஹிக்கும் கருணாமூர்த்தி.

261.  கஸ்தூரி சர்வணோத்யதா  

ஸாதகர்கள்தேவியின் ஆராதத்தினூடே உபாஸன க்ரமங்களின் அங்கங்களில் ஆழ்ந்து அவற்றின் ஒவ்வொரு நுணுக்கத்திலும் உள்ள ஆனந்த அம்சங்களை உண்ணி உண்ணி அனுபவித்துப் பரவசமடையும் நேரத்தில் தானே அதனதன் ரஸாநுபவத்தின் பெருக்காகவே தன்மயமாவதை உணர்ந்து உணர்ந்து பூரித்துப் போவதைக்கண்டு களிப்படைந்து அவர்களுடைய பிரேமபூர்ண பக்தியைஏற்று அவர்களை ஜீவன்முக்தர்களாக்கி மகிழும் பெருவள்ளல்.



(அடுத்த பதிவில் தொடரும்.)

No comments:

Post a Comment