Wednesday 27 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (15)



278.     கஸ்தூரி கந்த ஸம்ஸோபா விராஜிதகபோலபூ:

தன் பக்தர்கள் தன்னை ஆராதிக்குங்கால் சிறந்த பரிமளம் கொண்ட கஸ்தூரீ கந்த த்ரவ்யத்தை  தன் முகத்தில் கன்னத்தில் பொட்டாகச் சிறிதளவு தீட்டியிருப்பதால் நாற்புறமும் ஏராளமான நறுமணம் வீசி அவ்விடத்திலுள்ள எல்லோருடைய மனத்தையும் கவர்ந்து ஈர்ப்பவள்.

279.   கஸ்தூரி மதனாந்தஸ்ஸ்தா

கஸ்தூரீ எனப்படும் மஹா மங்கலமான சிறந்த பரிமள கந்த த்ரவ்யத்தினுள்ளே உறைந்து அதன் மிக மகிழ்ச்சியான நறுமணம் தன் பூஜை நிகழும் இடத்தில் காற்றில் நாற்புறமும் வீசி அவ்விடத்திலுள்ள எல்லோருடைய மனத்தையும் கவர்ந்து ஈர்ப்பவள்.

280.   கஸ்தூரீ மதஹர்ஷதா

தன் வழிபாட்டில் ஈடுபட்டுள்ள பக்தர்கள் மெய் மறந்து அதன் வீர்யமான போக்கில் லயித்திருக்கையில் தாம் காளிமயமாக மாறியுள்ள நிலையின் உன்னிப்பில் தன்மயமாவதைக் கண்டு களித்து அவர்களுக்கு நிரந்தரமான ஆனந்தமும் ஜீவன் முக்தியும் அளித்தருளும் கருணைக்கடல்.

281.   கஸ்தூரீ

தன் பக்தர்கள் தன் நிலையையும் ஸ்வரூபத்தையும் தன்னுடைய அடிப்படைத் தன்மையும் தன்னுடைய எல்லா இயல்புகளையும் அப்படியே தாமே மேற்கொண்டு தாமே காளிமயமாகவே மாறிவிட்டதைக் கண்டு, மட்டில்லா மகிழ்ச்சி கொண்டு, உடனே தானும் அந்த பக்தர்களுள் ஒருத்தியாகவே, அதாவது தானும் ஒரு பிரேம மயமான யோகிநியாகவே மாறி அவர்களுடன் கூட ஸரிசமனாக இயங்கி இன்னுணர்வு பொங்கி வழியப் பேருவகை எய்தி அவர்களுக்கு பேரானந்தமும் ஜீவன் முக்தியும் அளித்தருளும் க்ருபாநிதி.

282.   கவிதானாட்யா

பிரேமரசம் ததும்பும் தன்மய யோகிநிகளான தன் பக்தர்களுக்கு புக்தியின் விகாஸமும் நவரஸ ஸ்பூர்த்தியும் உத்தமமான கவிதா சக்தியின் விரிவான மலர்ச்சியும் எல்லை அற்ற ஆனந்தமும் ஜீவன் முக்தியும் அநுக்ரஹிக்கும் ஆனந்தமூர்த்தி.

283.   கஸ்தூரீ க்ருஹமத்யகா

ப்ரேம பக்தியாகிய லயயோகத்தில் தன்மயமாக ஆழ்ந்திருக்கும் தன் த்ருட பக்தனின் ஹ்ருதய கமலமாகிய தஹராகாசத்திலும், அவனுடைய ஸஹஸ்ரதள கமலமாகிய மஹா ஸ்மஸானத்திலும், மத்தஸ்தலமாகிய பிந்து ஸ்தானத்தில் தானாகவே விரைந்துசென்று உறைந்தருளும் பரமானந்தமூர்த்தி.

284.   கஸ்தூரீ ஸ்பர்ஸகப்ராணா

தன் பக்தர்களுக்குத் தேவையானவையும் மனதுக்கு பிடித்தமானவையும் ஆன பொருள்களைக் கொடுத்து உதவும் அன்பர்களையும் தன் பக்தர்களைப் போலவே ஆட்கொண்டு அவர்களையும் ரக்ஷித்து அருளும் கருணாமூர்த்தி.

285.   கஸ்தூரீ விந்தகாந்தகா

தன் பக்தர்களுக்கு முக்தி அளிக்கும் விஷயத்தில் அவர்களுடைய ஜ்ஞானத்தையோ, சீலத்தையோ, தகுதியையோ, விமர்சிப்பதொழித்து, ஸஹஜஸ்வச் சந்தாநு ஸாராமகவும் அவிம்ருஸ்யமாகவும் அவர்களுக்குத் தன் அநுக்ரஹத்தைப் பொழிந்தருளும் அவ்யாஜ கருணாமூர்த்தி.

286.   கஸ்தூர்யாமோதரஸிகா

தன் பக்தர்கள் தன் ஆராதன க்ரமங்களினூடே வெகு ஆனந்த நிலையில் ஆழ்ந்து மெய்மறந்து தன்னுடைய  சாந்நித்ய உணர்ச்சியில் லயித்துப்போவதைக் கண்டு பெருங்களிப்படைந்து அருள்பவள்.

287.   கஸ்தூரீக்ரீடனோத்யதா

தன் பக்தர்களின் குழாங்களில் தானும் ஒரு யோகிநியாகவே ஸஹஜமாகக் கலந்துகொண்டு அவர்களுடன் விநோதமான லீலைகள்  புரிந்து மகிழ்பவள்.

288.   கஸ்தூரீ தானநிரதா

தன் பக்தர்களுக்கு தேவையானதும் அவர்கள் மனதுக்கு பிடித்தமானதும் ஆன பலவகை பொருள்களை மழை எனப்பொழிந்து மகிழ்பவள்.

289.   கஸ்தூரீவரதாயினீ

தன் பக்தர்கள் கோரும் வரங்களை அவர்கள் கோரியபடி பொழிந்தருளும் கருணைக்கடல்.

290.   கஸ்தூரீஸ்தாபனாஸக்தா

ஸாதகன் த்யான யோக நிஷ்டையில் இருக்கும்போது அவனுடைய ஸமாதி நிலை சலியாமல் நிலைத்திருக்க அநுக்ரஹிக்கும் பராசக்தி.

291.   கஸ்தூரீ ஸ்தானரஞ்ஜினீ

தன் பக்தர்கள் எந்தஇடத்தில் இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு தானே ஸ்வச்சந்தாநு ஸாரமாக விரைந்து சென்று அவர்களுடைய உபசார  க்ரமங்களை ஏற்று அவர்களுக்கு ஆனந்தம் அளித்தருளும் கருணைக்கடல்.

292.   கஸ்தூரீ குஸப்ரஸ்னா

தன் பக்தர்களுடைய யோகச் க்ஷேமத்தில் தீவிர அக்கரை கொண்டு தானே ஒரு யோகினி வடிவத்தில் பக்தன் ஆரோக்யமாகவும் சௌக்கியமாகவும் இருப்பதை விசாரித்து தெரிந்து கொண்டு ஆவன செய்தருளும் சௌலப்யமூர்த்தி.

293.   கஸ்தூரீ ஸ்துதிவந்திதா

தன் பக்தர்கள் பலவகை ஸ்தோத்திரங்கள் மூலம் தன்னை ஸ்துதிக்க அவைகளை மனமாரக் கேட்டு ஏற்று மகிழ்ந்து அவர்களுக்கு பேரானந்தம் அளித்தருளும் க்ருபாநிதி


(அடுத்த பதிவில் தொடரும்)

No comments:

Post a Comment