Sunday 24 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (12)


223.  கர்ணபூரா

கர்ணாபர்ணமாக இறந்த இரு யானை  குட்டிகளை இரு காதுகளிலும் அணிந்து அந்த சின்னத்தின் மூலமாக யோகியின் பஞ்ச  ஜ்ஞானேந்த்ரியங்களுக்கும் அவற்றின் விஷயங்களுக்கும் பஞ்ச தன்மாத்திரைகளுக்கும் தொடர்பு அற்றுப்போன நிலையை ஸூசித்து, தன் வ்யக்த ஸ்வரூபத்தை தரிசித்த அளவில் பக்தனுக்கு தெள்ளிய ஜ்ஞானமும் யோக ஸாதனையும் ஸித்திக்கஅருள்பவள்.

224.  கர்ணநாசா

எல்லா வகை ஒலிகளிலும் லீலாவிநோதமாக ஊடாடி மகிழ்பவள். அதாவது ஒலி வடிவினள்.

225.  கர்ணாட்யா

பக்தர்களின் கர்ம பாசத்தை அறுத்தெறியும் பெருவள்ளல்.

226.  காலபைரவி

ஸ்ரீ மஹாகாளரின் ஜ்ஞான ஸக்தியின் வ்யக்தியாக லோக ஷேமார்த்தம் ஆவிர்பவித்து அருளிய மேதா ஜ்யோதிஸ் ஸ்வரூபியான ஸ்ரீ காலபைரவரின் ஸக்தியாகிய ஸ்ரீகாலபைரவி ஸ்வரூபத்தில் தோன்றி பக்தர்களுக்கு சீக்கிரமே ஆத்ம ஜ்ஞானம் ஸித்திக்க அருளும் பரம கருணாமூர்த்தி.

227.   கலப்ரீதா

மஹா மதுரமான அநாஹத  நாதத்தின்  ஸ்ரவணானந்தத்தில் மூழ்கி நிலைத்திருக்கும் லய யோகிகளாகிய பரம ஹம்சர்களின் அவிச்சின்ன நிஷ்டையில் மட்டிலா மகிழ்சி கொள்பவள்.

228.  கலஹதா

மஹா வலிமை படைத்த சத்ருக்களாகிய காமக்ரோதாதிகள் பக்தனுடைய  துர்பலமான மனஸ்ஸின் மீது செலுத்தும் பலத்த தாக்குதல்களைத் தகர்த்தெறிந்து அன்பனை ரக்ஷிக்கும் அன்பு வடிவினளான ஜகன்மாதா.

229.  கலஹா

காமக்ரோதாதிகளின் நாச வேலைகளை அழித்து பக்தனை தடுத்தாட்கொள்ளும் கருணைக்கடல்.

230.  கலஹாதுரா

பக்தனை வருத்தும் காமக்ரோதாதிகளாகிய அரிஷ்டவர்க்கத்தின் த்வம்ஸத்திலேயே எப்பொழுதும் இடையறாது ஈடுபட்டு அதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பவள்.

231.  கர்ணயக்ஷி

எல்லா தேவதைகளின் ஆராதன க்ரமங்களிலும் ப்ராண ஸக்தியாக இயங்கி அந்த அந்த பூஜைக்குரிய பலனை வழங்கி அருளும் பராசக்தி.

232.  கர்ணவார்த்தா

சேதனா சேதன மயமான இந்த பிரபஞ்சத்தில் அடங்கியுள்ள எல்லா பூதவர்க்கங்களிலும் தானே ஊடாடி கால பரிபாகாநுஸாரமாக ஒவ்வொரு ஜீவனையும் அவ்வப்போது அவனவன் நிலைக்கு தக்கப்படி மாற்றி அமைத்தருளும் ஜகன்மாதா.

233.  கதிநீ

மஹா வாக்கியங்களின் பொருளானவள். அதாவது தத்துவ விமரஸங்களுக்கு விஷயமானவள்.

234.  கர்ணசுந்தரீ

ஒவ்வொரு பக்தனையும் செவியின் வாயிலாக கம்பீரமான த்வனிகளால் உள்ளத்தை ஊக்குவித்தும் இனிய நாதங்களால் ரஸமயமான மனதின் உணர்ச்சிகளுக்கு ஆற்றல் கொடுத்தும் அர்த்த கர்ப்பமான சப்தங்களாலும் பதங்களாலும் புத்தியின் விமர்ச சக்தியை பெருக்கியும் இங்கனம் ஆனந்தக் கடலில் மூழ்கச் செய்து மகிழ்பவள்.

235.  கர்ணபிஸாஸிநீ

மஹோந்நதமான ஸாக்த உபாசகர்களின் தலைவனாக குபேரனாலும் அசாதாரணமான யோகியர்களின் தலைவனாக யமனாலும் நிகழ்த்தப்படும் ஆராதன க்ரமங்களில் ஊடாடி அந்த பிரயோகங்களில் தானாகவே இரண்டற கலந்து அவற்றை ஏற்று மகிழ்ச்சி பொங்கிவழிய அருள் மழை பொழிபவள்.

236.  கர்ணமஞ்சரீ

இந்தப் பரந்த ப்ரபஞ்ச வெளியில் அடங்கிய ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கும் தானே ஆதி சக்தி ஆயினும் தன் அருளை வேண்டும் எந்த பக்தனையும் ஆட்கொள்ள விழையுங்கால், அவனவன் நிகழ்த்தும் ஆராதன க்ரமங்களில் தானாகவே உட்புகுந்து ஊடாடி அவன் மனத்தில் அந்த அந்த அவஸரத்தில் த்யான ரீதியில் உருவகப் படுத்திக் கொள்ளும் எந்த எந்த உருவத்தையும் அப்படியே எடுத்த்க்கொண்டு அவனுக்கு பூரண பலன் அளித்து மகிழ்வித்து அருளும் அன்னையாம் ஆதிபராசக்தி.

237.  கபிகக்ஷதா

மாதவன், நாராயணீ, முதலான பரிவார தேவதைகள் பல்வேறு யோகினிகள் புடை சூழ  விழைந்து இயற்றும் ஆராதன க்ரமங்களை அன்புடன் ஏற்று அவற்றுக்கு தக்க பலன்களை வழங்கி மகிழ்பவள்.

238.  கவிகக்ஷவிரூபாட்யா

மூளையின் திறமை அதி வீர்யமாகப் படைத்து எவ்வளவு கம்பீரமான வலிமையுடன் செயல்படும் பெரிய உபாஸக கோஷ்டிகளாலும், கேவலம் புக்தி சாமார்த்தியத்த்தின் பெருக்கால் மட்டும் அடைய முடியாதவள். அதாவது அனன்ய ஸரணாகதி பாவம் மேலிட்டு, மன உருக்கம் பொங்கி, அளவு கடந்த அன்பின் எழுச்சியால் வீறு கொண்ட பிரேம பக்தி பிரவாஹத்தால் மட்டுமே பக்தனுக்கு எளிதில் வசப்படுபவள்.

239.  கவிகஷஸ்வரூபிணீ

ஸக்தி ஸிவ தத்துவத்தின் விசேஷ லக்ஷணங்களை நன்கு விமர்சித்து தெளிவாக உணர்ந்து, விதிமுறைப்படி உபாஸன ஆராதனை க்ரமங்களை பிரேம பக்தியுடன் நிகழ்த்தி, அனன்ய ஸரணாகதி பாவத்துடன் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும்  அற்பணிக்கும் பக்தனை அப்படியே  தன் உருவாகவே ஏற்று அநுக்ரஹீக்கும் பரம கருணாமூர்த்தி.

240.  கஸ்தூரிம்ருகஸம்ஸ்தானா

கஸ்தூரி எனப்படும் ஒரு வகை மானிலும், அதனின்று பெறப்படும் ம்ருகமதம். ம்ருகநாபி என்று சிறப்பித்துக் கூறப்படும் விசேஷமான கந்த த்ரவ்யத்திலும் பேருவகையுடன் ஸாந்நித்யம் கொண்டு அவற்றில் தன்னை ஆவாஹனம் செய்து ஆராதிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு அநுக்ரஹிக்கும் ஜகன்மாதா.

241.  கஸ்தூரிம்ருகரூபிணீ

கஸ்தூரி எனப்படும் சிறப்பு வகையான மான் கூட்டங்களில் ஊடாடி விளையாடி மகிழ்ந்து அந்த இனத்திலேயே  மெய்மறந்து தன்மயமாகி தானே அந்த மான் உருவம் தாங்கி அந்த உருவத்திலேயே தன்னை வழிபடும்  பக்தனுக்கு தன் அருளை வாரி வழங்கி மகிழ்பவள்.

242.  கஸ்தூரீம்ருகஸந்தோஷா

கஸ்தூரி மான் இனத்தில் பெருமகிழ்ச்சி கொண்டுஅந்த மான்களின் குழாங்களின்  ஓட்டத்திலும் விளையாட்டுகளிலும்  தானும் ஆனந்தத்துடன் கலந்து கொண்டு லீலைகள் பல புரிந்து மகிழ்பவள்.

243.  கஸ்துரீம்ருகமத்யகா

கஸ்தூரி மான்களின் பெரும் கூட்டங்களின் இடையே கலந்து அவற்றின் இனத்தில் பேதமில்லாமல் ஊடாடிக் கூடி லீலா விநோதமாக அவற்றை மகிழ்வித்து, தன் பக்தர்களுக்கு தன்னை இந்த மான்களில் ஒன்று போலவே பாவித்து, தாங்களும் அந்த மான்கள் போலவே பிரேமையுடன் தன்னிடம் விழைந்து  சரணமடைந்து தம்மை அற்பணிக்கும்  கபடமற்ற யோகிநிகளிடம்  களிப்படைந்து அருள்பவள்.

244.  கஸ்தூரிரஸநிலாங்கி

கஸ்தூரி ரஸத்தைப் போல் அழகிய பளபளத்த கரிய நிறத்துடன் பிரகாசிக்கும் புவன ஸுந்தரீ.

245. கஸ்தூரி கந்த தோக்ஷிதா.

கஸ்தூரியின் சிறந்த பரிமள கந்தத்தில் பெரிதும் மகிழ்பவள்.



(அடுத்த பதிவில் தொடருரம்)

No comments:

Post a Comment