Saturday 16 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (8)

147.  கபாலதீபஸ்ந்துஷ்டா

உபாஸகனுடைய ஸஹஸ்ரார பிரதேசத்தைத் தன் ஜ்ஞானாக்னியின் ஜ்வாலை வீச்சினால் தேஜோமயமாகப் பிரகாசிக்கச்செய்து அவனுடைய விமர்ச சக்தி வீர்யமடையச் செய்து மகிழ்பவள்.

148.  கபாலதீபரூபிணீ

உபாசகனுடைய ப்ரம்ஹ ரந்த்ர கமலத்தின் கர்ணிகா ஸ்தலமாகிய பிந்து ஸ்தானத்தில் பிரதிஷ்டையாகி நிரந்தரமாக அங்கு ஸாந்நித்யமாக இருந்துகொண்டு தானே அவனுக்கு ஸர்வ வித்யா ஸம்பிரதாய கர்த்ரீயும் ஸர்வ குருவும் ஆதலால் அவனுடைய விமர்ஸ ஸக்திக்குத் தேவையான சித்தத் தெளிவும்  புத்திகூர்மையும் அருளி, அவனுடைய ஞானம் கொழுந்து விட்டுப் பிரகாசிக்க  தானே அந்த ஸ்வச்ச ஜ்ஞானதிஜோமய ஆனந்த ரூபிணியாக ஒளிர்ந்து மகிழ்பவள்.

149.  கபாலதீபவரதா

உபாசகன் தீவிரமாக த்யானத்தில் ஆழ்ந்து லயித்திருக்கையில் அவனுடைய ஸஹஸ்ர தள கமலப் பிரதேசத்தில், தீவிர தியானத்தால் உண்டாகும் ஜ்யோதி நாற்புறமும் பரவிப் பிரகாசிப்பதால் அந்த  ஸ்தலம் முழுவதுமே  ஒளிமயமாக ஜ்வலிக்க, அவனுடைய இழ்ட தேவதா மூர்த்தியும் பரதேவதையும் ஸ்வகுர்வாதி ஸர்வ குருமூர்த்தியும் ஆகிய எல்லா மூர்த்திகளும் ஒருங்கே சேர்ந்து ஒரே  வ்யக்தி ஆனதால் அந்த ஜோதிஸ்ஸையே தன் ஸ்வரூப மூர்த்தியாகக் கொண்டு அந்நிலையில் அந்த முமுக்ஷுவை ஜீவன் முக்தனாக்கி  அருளும் கருணாமூர்த்தி.

150.  கபாலி

உபாஸகர்களுடைய ஸ்வகுரு, பரம குரு, பரமேஷ்டி குரு, பராபர குரு,  ஜகத்குரு, சர்யானந்த நாதர், ஆதிநாதர் என்றெல்லாம் பலபடியாக மூர்த்தங் கொண்டு ஸஹஸ்ரார மத்தியில் அவர்கள் த்யானம் செய்யும் குரு ஸ்வரூபத்தில் தோன்றி அருளி, அவர்களை உய்யும் மார்கதர்சியாக உபதேச வாயிலாக அவர்களை ஆட்கொண்டு கடைந்தேரவைக்கும் பரமாத்ம  ஸ்வரூபிணீ.

151.  கஜ்ஜலஸ்திதா

பரோபகார சிந்தாமணியான மேக ஜாலங்களில் ஊடுருவிப் பாய்ந்து கொண்டு பாரபக்ஷம் பாராமல்எல்லா ஜீவர்களுக்குமாக அம்ருதமயமான சுத்த ஜலத்தை ஏராளமாகப் பூமியில் பரவிப் பொழிந்துஅருளும் பெரும்வள்ளலான பர்ஜன்ய மூர்த்தி.

152.  கபாலமாலாஜயதா

முண்ட மாலையை தரிப்பதன் வ்யாஜமாக மாத்ருகா மண்டலத்தை தனக்கு உகந்த கண்டாபரணமாகத் தரித்து அருளியமையை உணர்ந்து சர்வ மாத்ருகா மயமாகவும் அதாவது சர்வ மந்திர மயமாகவும் ஆன தன் நிலையை உன்னித் தியானித்துக் கொண்டே செய்யும் மூல மந்திர ஜபத்தை ஆதாரமாகக் கொண்ட உபசன க்ரமத்தில் திளைத்த உபாஸகர்களின் எல்லா முயற்சிகளிலும் வெற்றியை அருளும் கருணாமூர்த்தி.

153.  கபாலஜபதோஷிணீ

ப்ரஹ்ம ரந்திர கமலத்தில் வீற்றிருக்கும் குருவின் ஸ்வரூபத்தை தியானித்துக் கொண்டே உபாசகர்கள் செய்யும் மூல மந்திர ஜபத்தில்  மகிழ்ச்சி அடைபவள்.

154.  கபாலஸித்திஸம்ஹ்ருஷ்டா

உபாசகர்களின் ஸஹஸ்ராரப் பிரதேசத்தின் மத்தியில் ஜ்யோதிர்மயமாக அமர்ந்து ஜ்ஞானானந்த ஸ்வரூபமாக பிரகாசிக்கும்  குருநாதரின் பாதுகையினிடத்தில் அனன்ய  ஸரணாகதி பாவத்துடன் ஸாதகன் செய்யும் த்யான தாரண  ஜப கிரமங்களுக்கு சீக்கிரமே ஸித்தி அருளி மகிழும் ஆனந்த மூர்த்தி.

155.  கபாலபோஜநோத்யதா

உபாச்சகனின் ஸஹஸ்ராரப் பிரதேசத்தின் மத்தியில் ஊர்த்வ ஜ்வலனமான ஜோதிர்மயமாகவும் ஜ்ஞான தேஜஸ்விநியாக பிரகாசிக்கும் குரு ஸ்வரூபிணியாகவும் ஜ்வலித்துக்கொண்டு ஸாதகனான ஜீவனை கடாகாசத்திலிருந்து ப்ரம்ஹ ரந்திரத்திநூடே மேலே கிளப்பி கபாலத்தை பிளந்துகொண்டு வெளிச் சென்று ஆகாசத்தில் கலந்து மோக்ஷம் அடைய அநுக்ரஹிக்கும் கருணாமூர்த்தி.

156.  கபாலாவ்ரதஸம்ஸ்தானா

குண்டலினி யோகம் அப்யசஸிக்கும் உபாசகனுடைய முயற்சியில் தானே ஊடுருவி அதனை ஒரு வ்ரதமாகவே அனுஷ்டித்து செய்யும் ஒரு சாதகனையாகவே நடத்தி சீக்கிரமே அவனுக்கு முக்தி சித்திக்க அருளும் தயாநிதி.

157.  கபாலி

குண்டலினீ யோகம் அப்யசிக்கும் உபாசகனுடைய சிரசில் ஸுஷும்ணா நாடியின் முனையில் சஹஸ்ராரத்தின் மத்தியில் மாத்ருகா மணிபீடத்தின் நடுவில் அந்த சாதகனுடைய குருமண்டல ஸ்வரூபிணீயாக  மஹா ஜோதிஸ் ஸுடன் ஆவிர்பவித்து அவனுடைய தியானத்தை வீர்யவதாக அவனுக்கு ஸமாதி நிலைக்கச் செய்து உடனே அவனை ஒரு பெரும் ஆனந்தநாதனாக ஆக்கி சீக்கிரமே அவன் ஜீவன் முக்தனாக அநுக்ரஹிக்கும் க்ருபைக்கடல்.

158.  கமலாலயா

மூலாதாராதி ஸஹஸ்ரார பர்யந்தமான தளங்களில் உள்ள அகுலாதி குல பர்யந்தமான ஸகல கமலங்களிலும், விசேஷமாக ப்ரஹ்மரந்த்ர கமலத்திலும் அஸமான தேஜஸ்விநியாக அமர்ந்து, உபாசகனுடைய அந்த அந்த க்ரந்தி கேந்திரங்களின் தன் சக்தியை அதிவேகமாக ப்ர்ஸரிக்கச் செய்து உடனே அவனுக்கு யோகம் பூரணமாக ஸித்திக்க அருள்பவள்.

159.  கவித்வாம்ருதஸாரா

உபாஸகனுடைய புத்தியில் அம்ருதப்ராயமான கவிதா சக்தி பிரஸரிக்கச் செய்து அவனுடைய வாக்கில் அலங்காரமயமான சொற்ப்ரபந்தம் இனிக்கச் சுரந்து உலகில் நாற்றிசையிலும் ரஸஜ்ஞர்களுக்குச் சுவையான விருந்தாக நறுமணமாக பரவி ஹ்ருதய சமூஹத்தை மகிழ்விப்பவள்.

160.  கவித்வாம்ருதஸாகரா

எல்லா சக்திகளுக்கும் உற்பத்தி ஸ்தானமாகஇருப்பவள் ஆதலால் பக்தர்களின் புக்தி சக்தியை தூண்டி அவர்களை நான்கு வித கவிதைகளும் பொங்கி எழும் சமுத்திரமாக்கி அவர்கள் வாக்கில் ஆலங்காரிக மாகவும் ரஸவைத்ததாகவும் ஆன பேச்சும் பாட்டும் கவிதையும் ஏராளமாக ப்ரவஹித்து எல்லோரையும் இன்புறுத்தி மகிழ அநுக்கிரஹிக்கும் கருணாமூர்த்தி.

161.  கவித்வஸித்திஸம்ஹ்ருஷ்டா

தன் பக்தர்கள் பிரேம பக்தியுடன் செய்யப்படும் மந்த்ரோபாஸனத்தின் விளைவாக, அபார கவிதா சக்திப் பெருக்கினால் பல வகை தான சப்த சித்தரம், அர்த்த வாச்ய சித்திரம் ஆகிய அழகுகள் பொலிந்த ஆலங்காரிகமான காவியங்கள் பல புனைந்து ஸஹ்ருதய ரசிகர்களை மகிழ்விப்பதைக் கண்டு களித்தருளும் கருணாமூர்த்தி.

162.  கவித்வாதானகாரிணீ

தன் பக்தர்கள் பேசும் பேச்செல்லாம் நவரசத் தேன் சொட்டும் அலங்கார பிரவாஹமான இன்னிசையாக கேட்பவர்கள் காதில் அம்ருத ப்ராயமான கவிதையாக விழும்படி  ஆக்கி அருளும் பெரு வள்ளல்.

163.  கவிபூஜ்யா

நாரத வசிஷ்ட வாமதேவாதி மஹோந்நதமான மகரிஷிகளாலும்  கால பைரவாதி மாஹா யோகிகளாலும் ஸனகாதி மஹாஜ்ஞானிகளாலும் காளிதாஸாதி மஹா கவிகளாலும் விதிமுறைப்படி பிரேம பூரணமான மந்த்ரோபாஸன மார்க்கத்தில் ஆராதிக்கப்படுபவள்.

164.  கவிகதி:

உலகில் சிறந்த புத்திசாலிகளால் மஹோந்நதமான கவிதா சக்தி அடையும் நோக்கத்துடன் சரணமடயப்படும் பராசக்தி.

165.  கவிரூபா

புத்தி சக்தியின் மலர்ச்சியே உலகில் மஹோந்நதமான  சக்தி ப்ரபாவம் என்னும்படியாக கவித்வமே தன் இயல்பாகி அங்கனமே உத்தம கவிகளே தன் வ்யக்த ஸ்வரூபங்களில் ஒன்றாகக்கொண்டு புத்திசாலிகளை மகிழ்விப்பவள்.

166.  கவிப்ப்ரியா

மஹோந்நதமான கவிகள் மீதும் அவர்களை புனையும் கவிதைகள் மீதும் அளவு கடந்த ப்ரீதி கொண்டு மகிழ்வித்து அருள்பவள்.



(அடுத்த பதிவில் தொடரும்)

No comments:

Post a Comment