Sunday 10 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (4)


72. கரகாசலரூபா

நானாவித பரிமள பத்திரங்களாலும் புஷ்பங்களாலும் அணிவிக்கப்பட்டு, சந்தன கும்கும அக்ஷதைகளால் சோபனமாக்கி, பூரணபலமாகிய முழுத்தேங்காய் சிகரமாக அமைக்கப்பட்டு, தேவியின் மூலமந்திரத்தின் ப்ரஸ்தாரப் பெருக்கம் மஹா மேருவாக மூர்திகரித்ததின் சின்னமாக உபாஸகனால் ஆவாஹனம் செய்யப்பட்டு அர்ச்சிக்கப்பட்ட உத பூர்ணகும்பத்தில் பூரண ஸாந்நித்யம் கொண்டு அருள்பவள்.

73. கரகாசலஸோபிநீ

அர்ச்சிக்கப்பட்ட உத பூரண அம்ருத கலசத்தின் பூரண ஸாந்நித்யம் கொண்டு அதி ஜாஜ்வல்யமான காந்தியுடன் பிரகாசிப்பவள்.

74. கரகாசலபுத்ரீ

அர்ச்சிக்கப்பட்ட உத பூரண  கும்பத்தை பக்தன் தன் சிரமீது தாங்கி ஆனந்தத்தின் ஆரவாரத்துடன் ஸஞ்சார ப்ரமணமாக ஆடிப்பாடி மகிழ்ந்த நிலையில் விளையாட்டுப் போக்கான குமாரியின் வடிவமாக மூர்திகரித்து அநுக்ரஹித்து அருள்பவள்.

75. கரகாசல தோஷிதா

அர்ச்சிக்கப்பட்ட உத பூர்ண கும்பத்தின் அம்ருதத்திற்கு ஒப்பான தீர்த்தத்தால் உபாசகனுக்கு அபிஷேகம் செய்வித்து  அவனை  புனிதமாக்கும் சடங்கில் பெரு மகிழ்ச்சி கொண்டு அநுக்க்ரஹித்து அவனது மும்மலங்களையும் களைந்து அவனை முக்திக்கு பாத்திரமாக்கி அருள்பவள்.

76. கரகாசல கேஹஸ்தா

மூலமந்தர  பூஜா ஹோம தர்பணாதிகளுடன் அர்ச்சிக்கப்பட்ட உத பூர்ண கும்பத்தின் அம்ருதப்ராயமான  தீர்த்தத்தால் அபிஷேகம் செய்விக்கப்பட்டு உபாசன பூரண தீக்ஷை பெற்று விதிமுறைப்படி தேவி ஆராதனைகள் செய்து மகிழும் பக்தனது க்ருஹத்திலேயே நித்ய வாசம் செய்து அனுக்ரஹிக்கும் பரம கருணாமூர்த்தி.

77. கரகாசலரக்ஷிணீ

மூலமந்திர சக்ர மகாமேரு பர்வதமாக ஆவாஹனம் செய்து அர்ச்சிக்கப்பட்ட உதகலஸத்தில் தேவியின் பூர்ண ஸாந்நித்தியம் கண்டு ஆனந்திக்கும் உபாஸகனது வாழ்கையில் தன் க்ரியா சக்தியை ப்ரஸரிக்கச் செய்து அவனை அரிஷ்ட வர்க்கங்கள் பாதிக்காவண்ணம்  ரக்ஷித்து அருள்பவள்.

78. கரகாசலஸம்மான்யா

பலவகையான சிறந்த வேதமந்த்ரங்களால் அபி மந்தரிக்கப்பட்ட உத பூர்ண கும்பத்தின் பூர்ண தீர்த்தத்தில் ஆவாஹனம் செய்து நிகழ்த்தப்படும் ஆராதனக் கிரமங்களில் பெரிதும் மகிழ்ச்சியுடன்  பூரண சாந்நித்யம் கொண்டு அநுக்ரஹிப்பவள்.

79. கரகா

உபாசகனின் யோக பீடமாகிய ப்ரஹ்மரந்த்ரமே தன் ஸமஸ்தானமாகக் கொண்டு அங்கேயே நித்ய வாசம் செய்துகொண்டு பக்தனின் மூர்த்தியே தன் ஸ்வரூபமாக அமைத்துக்கொண்டு இலங்குபவள்.

80. ககாரிணீ

தன்னுடைய மூலமந்திரத்தின் ப்ரதான மாத்ருகையாகிய க காரத்தின் ஒலி ஓட்டத்திலேயே ஸதா ஊடாடுபவள்.

81. கரகாசலவர்ஷாட்யா

தேவியின் மூலமந்திர சக்ர மகாமேருவாக ஆவாஹனம் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்ட உத பூர்ண கும்பத்தில் காளி ஸுக்தம் காளி உபநிஷத் முதலிய சிறந்த வேத மந்த்ரங்களால் பல ஆவ்ருத்தி ஸங்க்யையாக அபிமந்த்ரித்த புனித தீர்த்தத்தால் அபிஷேகம் செய்வித்து ஸம்ஸ்காரபூர்வமாக பூரண தீக்ஷை பெற்று, பூரண அதிகாரியாகி தேவியைச் சிறந்த முறையில் ஆராதனம் செய்து மகிழும் உபாஸகனை  உய்வித்து அவனுக்கு எல்லா மங்களங்களையும் மழை என பொழிந்து அருளும் பரம கருணாநிதி.

82. கரகாசலரஞ்சிதா

ஹோமங்களிலும் சக்ரதிலும் மேருவிலும் படம் விக்ரஹம் முதலியவற்றில் செய்யும் பூஜாக்ரமங்கள் போலவே உத கும்பமேருவிற்கும் ஸமஸ்த ராஜோபசாரங்களும் க்ரமமாக நிகழ்த்தி ஆராதனை செய்யும் உபாஸகனை உய்வித்து அருள்பவள்.

83. கரகாசலா

மஹாமேரு ஸ்வரூபமான உத பூர்ணகும்பத்தில் ஆவாஹனம் செய்யப்பட்டு அதனில் தன் பூர்ண சக்தியுடன் சாந்நித்யம் கொண்டுள்ளதால் அபி மந்த்ரிக்கப்பட்ட மூலமந்த்ரத்தின் ஸக்தியால் அந்தப் புனித தீர்த்தத்தால் பக்தனுக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டும் அதனை ப்ராஸநம் செய்தும் அதன்  வீர்யத்தால் அவன் மந்திர சித்தி பூரணமாக பெற்று உய்ய அநுக்ரஹிப்பவள்.

84. காந்தாரா

மந்த புத்திக்காரர்களாலும் தீரமில்லாத மனம் உள்ள கோழைகளாலும் சுலபமாக  அணுக முடியாத ஸஹஸ்ரதள கமலம் மத்தியிலுள்ள ப்ரஹ்மரந்த்ரமாகிய ஆனந்த வனத்தில் எப்பொழுதும் லீலா விநோதமாக உடாடிக்கொண்டே மகிழ்பவள்.

85. கரகாசசலமாலிநீ

மஹாமேருவாகிய உத பூர்ண கும்பத்தில் நிரப்பப்பட்டு, ஆவாஹனம் செய்து,மூலமந்திரத்தின் பீஜங்களில் அடங்கிய மாத்ருகா புஷ்பங்களின் வீர்யத்துடன் அபி மந்த்ரிக்கப்பட்ட ஜலத்தில் லீலாவிநோதமாக  உடாடிக்கொண்டே  மகிழ்பவள். மற்றும் வித்யாராஜ்ஞியின் பெருக்கமாக விரிந்துள்ள யந்திர மேருவை ப்ரதிபாதிக்கும் சஹஸ்ராரத்தின் பீடமாகிய மனித சிரஸ்ஸுகள்  ஐம்பத்தொன்று கோத்து அமைக்கப்பட்ட மாலையை தன் விசுக்தி ஸ்தானமாகிய  கழுத்தையும் ஆநாஹத ஸ்தானமாகிய ஹ்ருதயத்தையும் சேர்த்துச் சுழன்று அலங்கரிக்கும் வண்ணம் தானே அணிந்து மகிழும் ஆனந்த மாத்ருக ரூபிணி.

86. கரகாசலபோஜ்யா

மூல மந்திரத்தால்  அபி மந்திரிக்கப்பட்ட உத பூர்ண கும்ப ஜலத்தை அபிஷேகம் செய்து கொண்டு உட்கொண்ட மாத்திரத்தில் ஸாதகனை மந்திர ஸித்திக்கு பாத்திரமாக்கி  அநுக்ரஹிப்பவள்.

87. கரகாசலரூபிணீ

ஹோமங்களும் அபிஷேக அர்ச்சனாதி உபசார பூஜைகளும் அங்கங்களாகக் கொண்ட மஹாயஜ்ஞங்களில் ஸாதகனின்  ஆராதன க்ரமங்களில் உத பூர்ண கும்பஜலமே ஆவாஹ்யமான தன் இன்றியமையாத ஒரு ஸ்வரூபமாகக்கொண்டு அதனிலேயே பூர்ண ஸாந்நித்யமும் கொண்டு அநுக்ரஹிப்பவள்.

88. கராமலகசம்ஸ்தா

அபிஷேக அர்ச்சன ஹோமாதி அங்கங்கள் கொண்ட எந்த உபாசனை ஆராதன க்ரமங்களிலும் குருவின் உபதேசத்தால் தெளிவிக்கப்பட்ட தத்துவத்தை  ஆதாரமாகக் கொண்ட ப்ரயோக க்ரம ப்ரகாரம்  வழிபடுதல் இன்றியமையாத ஒரு அம்சமாக அமைந்து அதனிலேயே தன் கம்பீர  ஸாந்நித்யம் பூரணமாகக் கொண்டு அநுக்க்ரஹிப்பவள். அதாவது குறு தத்துவமே உருவானவள்.

89. கராமலகஸித்திதா

குரு தத்துவ விமரஸத்தால் ஏற்படும் விளைவாகிய மந்திர ஸித்தியின் காரணமாக ஆத்ம ஜ்ஞான ஸ்போடம் உண்டாகி ஸாதகன் ஜீவன் முக்தனாகி நித்ய சுகம் பெற அருள்பவள்.


(அடுத்த பதிவில் தொடுரும்)

No comments:

Post a Comment