Wednesday 6 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (1)

காளி சஹஸ்ரநாம விரிவுரை

ஸ்ரீ  ஸர்வஸாம்ராஜ்ய மேதா என்று அழைக்கப்படும், முற்றிலும் 'க' காரத்தில் துடங்கும், சுந்தரிக்கு சக்தி கொடுக்கும் ஸ்ரீ தக்ஷினகாளி சஹஸ்ரநாம மாலா ஸ்தோத்திரத்தின் தமிழ் விரிவுரை.

1.  க்ரீம காளி  

க்ரீம் இது ஸ்ரீ வித்யாராஞ்சியின் பிரதம பீஜம். இதன் சிறப்பான ஒலியின் ஓட்டத்தின் மூலம் காலசக்தியை இயக்கி பஞ்சக்ருத்யம் புரிந்து மகிழும் பராசக்தி.

2.  க்ரூம் கராலீ

ஜீவர்களுக்கு உபகரிப்பதர்க்காக முதன்முதலில் பிரபஞ்சத்தில் மூர்த்திகரித்த கருணைக்கடலான ஆத்யா பராசக்தியின் "தீபிகா" என்ற மகோந்நதமான ஜ்வலன ஸக்தி ஸ்வரூபிணி.

3.  கல்யாணி

பக்தர்களுக்கு ஸமஸ்த மங்களங்களையும் அனுக்ரஹிக்கும் கருணாமூர்த்தி.

4. கமலா

ஸாதகனுடைய மூலாதாரம் முதலிய தளங்களில் உள்ள கமலங்களிலும் மற்றும் அவனுடைய பாத கமலம், கர கமலம், முக கமலம், நயன கமலம் ஆகிய கமலங்களிலும் சிறப்பாக ஸஹஸ்ரதள கமலத்திலும்  த்வாதஸதள கமலத்திலும்  எப்பொழுதும் தானாகவே வந்துறைந்து அவனைத் தன் ஸாந்நித்தியத்தாலே  உய்வித்து அருள்பவள்.

5. கலா

பக்தர்களுக்கு ஆத்மஜ்ஞானமும் ஆனந்தமும் அருள்பவள்.

6. கலாவதீ

எல்லா சக்திகளுக்கும் அதிஷ்டான தேவதையாகவும் சக்திமயமாகவும் எல்லா அண்டங்களையும் இயக்கி எல்லா ஜீவர்களையும் ஆண்டருள்பவள்.  மேலும் பக்தனுக்கு தீக்ஷாபிஷேகம் செய்வித்து அவனை பூர்ணாதிகாரியக்கும் குரு ஸ்வரூபிணி.

7. கலாட்யா

சந்திரனின் பதினாறு கலைகள், சூரியனின் பன்னிரண்டு கலைகள், அக்னியின் பத்து கலைகள் பிரசித்தமான அறுபத்திநான்கு கலைகள் முதலிய எல்லா கலைகளுக்கும் இருப்பிடமானவள்.

8. கலாபூஜ்யா

எல்லா கலைகளின் அபிமான தேவதைகளாலும் ஆராதி க்கப்படுபவள்.

9.  கலாத்மிகா

எல்லாக் கலைகளும் தன்னுடைய உருவாகக்கொண்டு எல்லா ஜீவர்களையும் ரக்ஷிப்பவள்.

10. கலாஹ்ருஷ்டா

கலைகளை விதிமுறைப்படி அப்பியஸித்து அழகு பெற அனுஷ்டிப்பவரிடம் அளவு கடந்த  மகிஷ்ச்சி கொண்டு அருள்பவள்.

11. கலாபுஷ்டா

உலக மக்களிடையே கலாப்பியாஸமும் கலானுஷ்டானமும் வீர்யமாகவும் பூரண மனோலயத்துடன் வீசிப்பரவ அனுக்ரகிப்பவள்.

12. கலாமஸ்தா

கலாபிமான தேவதைகளுக்கெல்லாம் சிகரம் போன்றவள்.

13. கலாகரா

கலைகளின் லக்ஷணங்களிலும் அவ்வப்போது மேலும் மேலும் புதிய புதிய அழகு அம்சங்களைக் கல்பித்துப் பரப்பி இன்புருபவள்.

14. கலாகோடிஸமாபாஸா

பக்தர்களுக்கு கலைகளில் மஹோந்நதமான சிறப்புப் பதவி அளித்து அவர்களை பிரகாசமாக சோபிக்கச் செய்து மகிழ்பவள். குறிப்பாக தன் வித்யோபாஸகர்கள் இஷ்ட தேவதையின் தன்மையத்வம் அடைந்து ஜாஜ்வல்யமாகப் பிரகாசிக்கச் செய்யும் கருணைக்கடலான வித்யா மூர்த்தி.

15. கலாகோடிப்ரபூஜிதா

சக்திதத்துவத்தின்  இணையற்ற பிரபாவத்தை நன்கு உணர்ந்தவர்களும் பூர்ண தீக்ஷை பெற்றவர்களும் பரமோத்க்ருஷ்டமான கலாவித்பன்னர்களுமான பக்தர்களால் விதிமுறைப்படி சிறப்பாக ஆராதிக்கப் படுபவள்.

16. கலாகர்ம்மா

நுண் கலையின் மேன்மையான செயல்பாடே தன் ஸ்வரூபத்தின் சிறப்பம்சமாக கொண்டவள்.

17. கலாதாரா

எல்லாக்கலைகளுக்கும் அடி நிலையானவள்.

18. கலாபாரா

கலைச் சிறப்பின் லக்ஷ்ய  நிலையே உருவானவள்.

19. கலாகமா

கலைகளின் அனுஷ்டானத்தில் அனன்ய மனோலயத்தின் மந்திரத்தாலேயே எளிதில் அடையக் தக்கவள்.

20. கலாத்தார

பிரேமை என்கிற வசிய சக்திக்கு அடிநிலையானவள்.

21. கமலினீ

குல சஹஸ்ராரம், அகுலசஹஸ்ராரம், மாத்ருகா பீடத்தின் மத்தியிலுள்ள த்வாதசதள குரு பீட கமலம், ஷடாதார கமலங்கள், வதன கமலம், பத கமலம், நாபி கமலம், ஹ்ருதய கமலம் முதலிய கமலங்களில் செயல்படும் உணர்சிகளுக்கு உரியவள்.

22. ககாரா

மாத்ருகா மண்டலத்தில் ஆத்ய வ்யஞ்ஜன மாத்ருகையாகிய "க" காரமும் ஆத்ய ஸ்வர மாத்ருகையாகிய "அ" காரமும் இரண்டற இணைந்ததால் 51 மாத்ருகைகளும் ஒருங்கே இணைந்த நிலையாகி அதன் ஒலியே தன் வடிவாகியவள்.

23. கருணா

பூர்வ கர்மாக்களின் விளைவாகப் பலவாறாகத் துன்பப்படும் ஜீவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களைப் பார்த்து ஸஹிக்கமாட்டாமல் அவர்களின் துயர் துடைக்க விழையும் தயாநிதியாகிய பரமேஸ்வரி.

24. கவி:

பக்தர்களுக்கு எல்லா உலகங்களிலும் வீசிப்பிரகாசிக்கும் புக்தி தீக்ஷணமும் அபார கவிதா சக்தியும் அருளும் பேரு வள்ளல்.

25. ககாரவர்ண ஸர்வாங்கீ

தியானிக்க வேண்டிய தன்னுடைய ஸகுணப்ரஹ்ம வ்யக்தி ஸ்வரூபம் முழுவதும் 'க' கார அக்ஷரத்தின் ஒலி வடிவமாகவே பக்தனின் புக்தியில் ஸ்புரிக்கச்செய்து மகிழ்பவள்.

26. கலா 

குலஸஹஸ்ராரத்துக்கு மேலாகவும் அகுல சஹஸ்ராரத்துக்குக் கீழாகவும் அமைந்துள்ள எல்லா தளங்களிலுமாக விரவியுள்ள 360 கலைகளிலும் வர்ஷத்தின் தினங்களிநூடே செல்லும் கால சக்தியாய் பாய்ந்து ஜீவர்களின் செயலாற்றலைத் தூண்டி அதனில் தானே ஸாந்நி த்யமாக அமர்ந்து பக்தன் தன்னுடைய எல்லா ஸாதனைகளும் பூரண சித்தி பெற்று ஆனந்தமும் சாந்தியும் அடைய அனுக்கிரஹித்து மகிழ்பவள்.

27. கோடிப்ரபூஷிதா 

ஜீவனின் புத்தியில் பராகாஷ்டையாகிய சைதன்யத்தில் தன் அம்சமாகிய  சித்சக்தியின் ஆற்றலைப்பாயச் செய்து பக்தனின் செயல்களை சபலமாக்கி அருள்பவள். மேலும் தன் மூல மந்த்ரத்தில் அடங்கியுள்ள ரஸகோடி, க்ரியாகோடி, ஜ்ஞானகோடி, ஆனந்தகோடி எனப்படும் தளங்களில் அமர்ந்துள்ள இச்சா, க்ரியா, ஜ்ஞான, சமஷ்டி ஆகிய நான்கு சக்தி நாளங்களின் ஸமவாய ப்ரவாஹா ஸங்கமானத்தால் சிறப்பாக அணி செய்யப்பட்டவள்  அதாவது, சர்வ ஸாக்த  மந்திரங்களின் சமஷ்டியான ஓஜஸ்ஸே விக்ரஹமானவள்.

28. ககாரகோடிகுணிதா

சஹ ஸ்ராரத்தின் மத்தியில் த்வாதச தள கமலத்தைச் சுற்றியுள்ள மாத்ருகாக்ஷர  மணிபீடத்தில் அகாராதி ஷகாராந்தமான 51 ஸ்வரவ் யன்ஜன ரூபமாக அமர்ந்துள்ள மாத்ருகைகளின் இனிய நாதத்தில் இடையறாது சுழன்று ஓடிக்கொண்டிருக்கும் கேவலம் ஒலி வடிவாகவே ஸதா பாய்ந்து கொண்டிருப்பதிலேயே பெரிதும் மகிழ்பவள்.

29. ககாரகோடிபூஷணா

ககாரத்தின் உத்தம த்வனியையே பூஷணமாகக் கொண்டவள்.

(அடுத்த பதிவில் தொடரும்)

No comments:

Post a Comment